Published : 07 May 2025 09:32 PM
Last Updated : 07 May 2025 09:32 PM
கோவை: கோவையில் ரயில் தண்டவாளத்தில் கல் வைத்த வழக்கில், கல்லூரி மாணவர்கள் 5 பேரை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் இருந்து கோவை வழியாக மேட்டுப்பாளையத்துக்கு இயக்கப்படும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (மே 7) அதிகாலை 4.15 மணிக்கு கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த ரயில், கோவை ஆவாரம்பாளையம் ரயில்வே மேம்பாலம் அருகே வந்தபோது, அங்குள்ள தண்டவாளத்தில் 2 அடி நீளம், ஒரு அடி அகலம் கொண்ட கான்கிரீட் கல் வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து ரயில் ஏறியதும், அங்கு வைக்கப்பட்டிருந்த கல் சுக்குநூறாக நொறுங்கியது.
பின்னர், ரயில் இன்ஜின் ஓட்டுநர் கோவை ரயில் நிலையம் வந்ததும், இதுகுறித்து கோவை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாாிடம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் உபேந்திரகுமார் தலைமையில், கோவை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். அப்போது அங்கு 5 பேர் தண்டவாளத்தின் அருகே அமர்ந்திருந்தனர்.
உடனே போலீஸார் 5 பேரையும் பிடித்து விசாரித்த போது, அவர்கள் கான்கிரீட் கல்லை எடுத்து தண்டவாளத்தில் வைத்ததும், விளையாட்டுக்காக இதை செய்தததும் தெரியவந்தது. மேலும், விசாரணையில் பிடிபட்ட 5 பேரும் கோவை அருகேயுள்ள, ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதும், 18 வயது நிரம்பாதவர்கள் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT