Published : 06 May 2025 05:28 AM
Last Updated : 06 May 2025 05:28 AM
கரூர்: குளித்தலை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் நடனமாடும்போது ஏற்பட்ட தகராறில் சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். கரூர் மாவட்டம் குளித்தலை கொல்லம்பட்டறை தெருவைச் சேர்ந்தவர் ஷ்யாம்சுந்தர்(17). இவர், பிளஸ் 2 தேர்வு எழுதி இருந்தார்.
இவர், நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற குளித்தலை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா ஊர்வலத்தில் நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது, இவர் மீது பிள்ளை தோப்பு தெருவைச் சேர்ந்த நாகேந்திரன் உள்ளிட்ட சிலர் விழுந்துள்ளனர்.
இதனால், ஷ்யாம்சுந்தர் அவர்களை ஓரமாக சென்று நடனமாடுமாறு தெரிவித்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த அவர்கள் ஷ்யாம்சுந்தர் மற்றும் அதை தடுக்க வந்த அவரது நண்பர்கள் அஜய், வசந்தகுமார் ஆகியோரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதில், படுகாயமடைந்த ஷ்யாம்சுந்தர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காயமடைந்த அஜய், வசந்தகுமார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதுகுறித்து குளித்தலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஷ்யாம்சுந்தர் உடலை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
இதையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குளித்தலை பிள்ளை தோப்பு தெருவைச் சேர்ந்த நாகேந்திரன்(20), ஷேக்தாவூத் என்ற முஸ்தபா(19), மீன்கார தெரு ராம்குமார்(22), மலையப்ப நகர் லோகேஸ்வரன்(21) ஆகிய 4 பேரை குளித்தலை போலீஸார் நேற்று கைது செய்து, தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர்.
குளித்தலை மகா மாரியம்மன் கோயில் புதிதாக கட்டப்பட்டு 5 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெறும் நிலையில், 17 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT