Published : 01 May 2025 03:52 PM
Last Updated : 01 May 2025 03:52 PM
சென்னை: சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்தவரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து ரூ.15,450 மதிப்புள்ள 6 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில், நேற்று (ஏப்.30) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையே ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் (Black Market) விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டதின்பேரில், உயர் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கண்காணித்து வந்தனர்.
திருவல்லிக்கேணி (D-1) காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை, பெல்ஸ் ரோடு, வாலாஜா ரோடு சந்திப்பு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, சேப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் ஆகிய இடங்களில் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில், கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக கள்ள சந்தையில் (Black Market) அதிக விலைக்கு விற்பனை செய்த மேடவாக்கத்தைச் சேர்ந்த ராம்மோகன் (46), என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து கள்ள சந்தை மூலம் விற்பனை செய்ய வைத்திருந்த ரூ.15,450 மதிப்புள்ள 6 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட ராம்மோகன் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT