Published : 24 Apr 2025 07:03 AM
Last Updated : 24 Apr 2025 07:03 AM

​மு​தி​ய​வரிட​ம் செல்​போன் பறித்து தலைமறை​வாக இருந்​தவர் கைது

சென்னை: முகவரி கேட்பதுபோல் நடித்து முதியவரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த வழிப்பறி கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.

சென்னை திருவல்லிக்கேணி, சிவராமன் தெருவில் வசிப்பவர் சங்கரபெருமாள் (72). இவர், கடந்த 14-ம் தேதி காலை மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரி முன்பு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரே இருசக்கர வாகனத்தில் 3 பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் சங்கரபெருமாளிடம் முகவரி கேட்பது போல நடித்து, அவர் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துவிட்டு தப்பினார்.

இது தொடர்பாக மெரினா காவல் நிலையத்தில் சங்கரபெருமாள் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து சம்பவ இடம் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மண்ணடி, சைவ முத்தையா முதலி தெருவைச் சேர்ந்த ரமேஷ்குமார் (35), முத்தியால்பேட்டை, ராமசாமி தெருவைச் சேர்ந்த சிக்கந்தர் (35) ஆகிய இருவரை அண்மையில் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மண்ணடி மலையப்பன் தெருவைச் சேர்ந்த அணில்குமார் (27) என்பவரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர், அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x