Published : 22 Apr 2025 09:23 AM
Last Updated : 22 Apr 2025 09:23 AM
என்ன சார் பண்றது... முன்ன போனா முட்டுது பின்ன போனா ஒதைக்கிதுன்ற கதையா போச்சுது எங்க பொழப்பு” என்று புலம்பித் தவிக்கிறார்கள் விருத்தாச்சலம் அருகிலுள்ள கருவேப்பிலங்குறிச்சி ஸ்டேஷன் போலீஸார்!
திருவிளையாடல் தருமி கணக்காய் இவர்களை இப்படி புலம்பவிட்டவர் கஞ்சா அடிக்ட் ஐயப்பன். விருத்தாசலம் அருகே சி.கீனனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன். சிறுமியை திருமணம் முடித்த குற்றத்துக்காக போக்சோ வழக்கில் உள்ளே போய்விட்டு ஜாமீனில் வெளியில் வந்த இவரை கஞ்சாவுக்கு அடிமை என்கிறது போலீஸ். இந்த நிலையில், கடந்த 10-ம் தேதி தன்னிலை மறந்த நிலையில் மூதாட்டி ஒருவரை தாக்கி இருக்கிறார் ஐயப்பன். இதையடுத்து அவரை சுற்றி வளைத்து ‘கவனித்த’ பொதுமக்கள், கையோடு கொண்டு போய் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள்.
ஐயப்பன் அப்போது இருந்த நிலையில் அவரை எப்படி விசாரிப்பது என்று குழம்பிப் போன போலீஸார், மிகவும் முன்ஜாக்கிரதையாக ஸ்டேஷனுக்கு வெளியிலேயே வைத்து விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள். அப்போது போலீஸார் கேட்ட கேள்விகளுக்கு முறையாகப் பதில் சொல்லாமல், “நீங்க என்னைய மூன்றரை மணி நேரமா அடிச்சிருக்கீங்க. நான் அப்படியே படுத்துக் கெடந்தேன். என்னோட பனியனையும் கிழிச்சுட்டீங்க. மொதல்ல போயி புது பனியன் வாங்கிட்டு வாங்க. எப்டியும் ராத்திரி முழுக்க வெச்சு என்னைய கிழி கிழின்னு கிழிக்கப் போறீங்க. அதுக்கு முன்னாடி எனக்கு குவாட்டரும் பிரியாணியும் வாங்கிக் குடுங்க. இல்லாட்டி, அடிச்சு சாவடிச்சிட்டு ஜட்ஜ்கிட்ட ‘ஐயா ராத்திரிதான் கூட்டிட்டு வந்தோம் காலையில பார்த்தா செத்துட்டான்’ன்னு சொல்லப் போறீங்க” என்று போலீஸாரிடம் தெனாவெட்டாக பேசி இருக்கிறார் திருவாளர் ஐயப்பன்.
அப்போது பக்கத்தில் நின்ற காவலர் ஒருவர், “காலைலருந்து கால் கடுக்க நிக்கிறேன்டா... கொஞ்சம் கம்முன்னு இரு” என்று, ‘அவன் இவன்’ படத்து போலீஸ் கணக்காய் சொல்ல, அதற்கும் அலட்சியமாகவே பதில் சொல்லி இருக்கிறார் ஐயப்பன். இதனையடுத்து, வேறு வழியில்லாமல் விசாரணையை முடித்து(!?) ஐயப்பனை ரிமாண்டுக்கு அனுப்பி இருக்கிறது போலீஸ். இம்சை அதோடு முடிந்ததாக போலீஸார் நினைத்துக் கொண்டிருக்க, இந்த விசாரணை படலம் முழுவதையும் யாரோ ஒருவர் முழுமையாக வீடியோ எடுத்து அதை சோஷியல் மீடியாவில் சுற்றவிட்டு லைக் பார்த்திருக்கிறார்.
இதைப் பார்த்துவிட்டு பலரும் காவல் துறைக்கு எதிரான விமர்சனங்களை பதிவிட்டனர். இதையடுத்து கருவேப்பிலங்குறிச்சி பொறுப்புக் காவல் ஆய்வாளர் கவிதா, இதுகுறித்து விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில், ஐயப்பனை ‘டீல்’ செய்த காவலர்கள் அனைவருக்கும் தற்போது மெமோ கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆய்வாளர் கவிதாவிடம் பேசினோம். “என்ன சார் பண்றது... ‘குளியலறை தவிர்த்து ஏனைய இடங்கள் எல்லாம் பொது இடமாவே மாறிப் போச்சு. அதனால அனைத்தையும் கவனமா கையாளுங்க’ன்னு முதலமைச்சர் ஐயா சொல்லிக்கிட்டே இருக்காரு. ஆனாலும் இப்படியொரு சம்பவம் நடந்துருச்சு. இது மாதிரியான போதை ஆசாமிகள நாங்க எப்படி கையாள்றதுன்னே தெரியல. முன்ன போனா முட்டுது பின்ன போனா ஒதைக்கிதுன்ற கதையா இருக்கு எங்க கதை.
எங்க போலீஸ் மேலயும் தப்புச் சொல்ல முடியாது. ஏன்னா... அவனே போதையில இருந்துருக்கான். ஊர் மக்கள் வேற அவனுக்கு தர்ம அடி குடுத்துத்தான் கொண்டு வந்து விட்டுருக்காங்க. அப்படி இருக்கவன ஸ்டேஷனுக்குள்ள வெச்சு விசாரிச்சு ஏதாச்சும் ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடுச்சுன்னா லாக் அப் டெத்துன்னு அப்பவும் போலீஸத்தான் தூத்துவாங்க. அதுக்குப் பயந்து தான் அவன உள்ள வெச்சு விசாரிக்காம வெளியில வெச்சு விசாரிச்சுருக்காங்க. அது குத்தமாப் போயி இப்ப அதிகாரிகளுக்கு பதில் சொல்ல வேண்டியதாப் போச்சு. அவன வீடியோ எடுக்குற வரைக்கும் அஜாக்கிரதையா இருந்ததுக்காக எங்காளுங்களுக்கு இப்ப மெமோ குடுக்க வேண்டியதாப் போச்சு” என்றார் அவர்.
இது குறித்து அந்த ஸ்டேஷனின் சட்டம் - ஒழுங்கு பிரிவு காவலர் ஒருவர் நம்மிடம் நைசாக, “சார்... இத்தனைக்கும் காரணம் தனிப்பிரிவு காவலர்கள் தான். கஞ்சா போதை ஆசாமிகள், இதுபோன்ற போக்சோ குற்றவாளிகள் நடமாட்டம் குறித்து தனிப்பிரிவு போலீஸாருக்கு நல்லாவே தெரியும். அவர்கள் குறித்தெல்லாம் முன்கூட்டியே தகவல் தந்தால் சட்டம் - ஒழுங்கு போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும். ஆனால், தனிப்பிரிவு போலீஸார் சிலர், இதுபோன்ற சமூக விரோதிகளுடன் தனியாக ‘டீல்’ வைத்துக் கொண்டு அனைத்தையும் மறைத்துவிடுகிறார்கள். ‘டீல்’ படியாத போது மட்டும் எங்களை இழுத்து தெருவுல விட்டுடுறாங்க” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT