Published : 20 Apr 2025 01:25 PM
Last Updated : 20 Apr 2025 01:25 PM
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் ஹரிஹரனை மற்ற கைதிகளைப்போல நடத்த வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பதவி வகித்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வழக்கறிஞர் ஹரி ஹரன் என்பவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது மகனை சந்திக்க சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்றும், தொலைபேசி மூலம் பேச வாய்ப்பளிக்கவி்ல்லை எனவும் கூறி ஹரிஹரனின் தாயார் கல்பனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.காசிராஜன், 'மனுதாரர் ஒவ்வொரு முறை சிறைக்கு செல்லும் போதும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. மற்ற கைதிகளைப்போல அவரையும் சமமாக நடத்த உத்தரவிட வேண்டும்' என கோரிக்கை விடுத்தார்.
புழல் சிறை நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.கோபிநாத், வழக்கறிஞர் ஹரிஹரனின் பாதுகாப்பு கருதியே உயர் பாதுகாப்பு கொண்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மனுதாரர் உள்ளிட்ட உறவினர்கள் ஹரிஹரனை சந்திக்க அனுமதிக்கப்படுவதாகவும், வீடியோ கால் உள்ளிட்ட தொலைபேசி வாயிலாக பேச அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, சிறையில் உள்ள மற்ற கைதிகளைப் போல சட்டத்துக்குட்பட்டு அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதுடன், ஹரிஹரனையும் மற்ற கைதிகள்போல பாவிக்க வேண்டுமென புழல் சிறைத் துறை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT