Published : 16 Apr 2025 06:30 AM
Last Updated : 16 Apr 2025 06:30 AM
சென்னை: வேளச்சேரியில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் ஈடுப்பட்ட காவலரை தாக்கிய தந்தை, மகனை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை வேளச்சேரி காந்தி சாலையில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன் தினம் நடந்தது. அப்போது, அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, வேளச்சேரி காவல் நிலைய காவலர் காமராஜ் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை ஓரமாக செல்லுமாறு காவலர் காமராஜ் கூறினார். இதனால், ஆத்திரம் அடைந்த அந்த இருவரும் காவலர் காமராஜிடம் வாக்குவாதம் செய்தனர். இதை காமராஜ் அவரது செல்போனில் படம் பிடித்தார். உடனே, 2 பேரும் சேர்ந்து காவலர் காமராஜை தள்ளிவிட்டு அவரை தாக்கினார்.
இதையடுத்து, நிகழ்ச்சியில் இருந்த திமுக பிரமுகர்கள் ஒடி வந்து சமாதானம் செய்து அவர்களை அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வேளச்சேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காவலரை தாக்கியது வேளச்சேரியை சேர்ந்த கணேசன்(55) மற்றும் அவரது மகன் பிரிதீபன்(32) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT