Published : 15 Apr 2025 06:37 PM
Last Updated : 15 Apr 2025 06:37 PM
மதுரை: மதுரையில் ‘சிட் பண்ட்’ நடத்துவதாக கூறி ரூ.15.50 லட்சம் மோசடி செய்ததாக அரசு பள்ளி ஆசிரியை மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மற்றொரு அரசு பள்ளி ஆசிரியை புகார் அளித்துள்ளார்.
மதுரை விளாங்குடியைச் சேர்ந்தவர் அரசு பள்ளி ஆசிரியையான கவிதா. இவர் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுத்த புகார் ஒன்றின் விவரம்: மதுரை அலங்காநல்லூர் அருகிலுள்ள தண்டலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக பணிபுகிறேன். அலங்காநல்லூர் சரந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியையாகப் பணிபுரியும் ரேவதியை 2009 முதல் தெரியும். இவர் என்னிடம் பேசினார். அப்போது நானும், எனது கணவரும் ‘சிட் பண்ட்’ நடத்துகிறோம். இதில் சேமிப்பு சீட்டு திட்டத்தில் தவணை முறையில் பணம் செலுத்தினால் மொத்தமாக தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.
அவரது வார்த்தைகளை நம்பி கடந்த 2017-ல் ரூ.1 லட்சம் சீட் இரண்டு, 2021-ம் ஆண்டு ரூ.5 லட்சம் சீட் இரண்டு, ரூ. 3.50 லட்சம் சீட் ஒன்று என, மொத்தம் ரூ.15.50 லட்சம் செலுத்தினேன். இத்தொகையை மாதந்தோறும் தவணை 2022-ம் ஆண்டில் முழுவதும் செலுத்தி முடித்துவிட்டேன். ஆனாலும், இதுவரை ரேவதி பணம் தராமல் அலைக்கழித்து வருகிறார். தொடர்ந்து அவரிடம் பணத்தை கேட்டபோது, தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டலும் விடுகிறார். என்னை போன்று பல ஆசிரியர்களை ஏமாற்றி பணம் பறித்து மோசடி செய்திருப்பதும் தெரிகிறது.
ரேவதி மற்றும் அவரது கணவர் சத்தியமூர்த்தி, அவர்களது மகள்கள் பிரிய நந்தினி, ப்ரீத்தி மற்றும் மருமகன்கள் மீது சட்டபட்டி நடவடிக்கை எடுக்கவேண்டும். எனது ரூ.15.50 லட்சத்தை மீட்டுத் தரவேண்டும் என்று அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT