Published : 09 Apr 2025 06:45 AM
Last Updated : 09 Apr 2025 06:45 AM
சென்னை: 14 வயது சிறுவன் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இதில் 2 பேர் காயம் அடைந்தனர். வடபழனியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் 14 வயதுடைய தனது மகனிடம் கார் சாவியை கொடுத்து குமரன் நகர் 7-வது தெருவில் நிறுத்தி வைத்துள்ள காரை தூசி படாமல் கவர் போட்டு மூடிவிட்டு கூறி அனுப்பியுள்ளார்.
ஆனால், அந்த சிறுவனோ தன்னுடன் நண்பரை காரில் ஏற்றிக்கொண்டு குமரன் நகர் பிரதான சாலை வழியாக, காரில் ஒரு ரவுண்ட் சுற்றி வருவதற்காக காரை ஓட்டிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், வடபழனி குமரன் நகர் 5-வது குறுக்குத் தெரு அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து கார் சாலை ஓரம் நின்ற ஆட்டோ மற்றும் சாலையில் நடந்து சென்ற முதியவர் உட்பட இருவர் மீது அடுத்தடுத்து மோதி, பின்னர் ஒரு மரத்தின் மீது மோதி நின்றது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் விரைந்தனர். காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், காயமடைந்தவர்கள் சாலிகிராமம் தனலட்சுமி காலனி வெங்கடேஸ்வரா தெருவை சேர்ந்த மகாலிங்கம் (69) மற்றும் சாலிகிராமம் நளன் தெருவை சேர்ந்த உணவு விநியோக ஊழியர் கங்காதரன் (49) என தெரியவந்தது.
இதையடுத்து, காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 14 வயது சிறுவன், காரில் அமர்ந்து சென்ற அவரது நண்பரான 13 வயது சிறுவன் மட்டும் அல்லாமல் அவர்களது பெற்றோரையும் நேரில் அழைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT