Published : 08 Apr 2025 04:29 AM
Last Updated : 08 Apr 2025 04:29 AM
சென்னை: சென்னை ஜெ.ஜெ.நகர் அரசர் தெருவிலுள்ள அரசு ஊழியர் வாடகை குடியிருப்பில் வசித்து வருபவர் கென்னடி(52). இவர், உயர் நீதிமன்றத்தில் பதிவு எழுத்தராகப் பணி செய்து வருகிறார். கடந்த 4-ம் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன், சொந்த ஊரான புதுக்கோட்டைக்குச் சென்றார். இதை நோட்டமிட்ட திருடன் ஒருவர், நேற்று அதிகாலை 2.45 மணி அளவில் கென்னடி வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தார்.
கதவை உடைக்கும் சத்தம் கேட்டு முதல் மாடியில் வசிக்கும் பெண், கீழ் தளத்தில் உள்ள கென்னடி வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது, அங்கு திருடன் ஒருவர் பொருட்களை திருடிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப் பெண், உடனடியாக கென்னடியின் மனைவிக்கு தகவல் தெரிவித்தார். அதோடு, தனது வீட்டில் இருந்த பூட்டால், கென்னடி வீட்டை வெளிப்புறமாக பூட்டினார்.
பின்னர், காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய போலீஸார் பூட்டைத் திறந்து உள்ளே செல்ல முயன்றனர். ஆனால், திருடன், வீட்டின் உள் பகுதியில் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு கட்டிலுக்கு கீழ் பதுங்கிக் கொண்டார்.
உடனடியாக தீயணைப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் உதவியுடன் போலீஸார் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர், படுக்கை அறையில் உள்ள கட்டிலுக்கு கீழ் பதுங்கி இருந்த திருடனைக் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த நபர் கன்னிகாபுரம், கஸ்தூரிபாய் காலனி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன்(27) என்பது தெரியவந்தது. இவர் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT