Published : 06 Apr 2025 01:39 PM
Last Updated : 06 Apr 2025 01:39 PM

சென்னை: வடமாநில தொழிலாளர்களை தாக்கி பணம், செல்போன் திருடிய தம்பதி கைது

வடமாநில தொழிலாளர்களை தாக்கி பணம், செல்போன்களை திருடி சென்ற தம்பதியை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை அயப்பாக்கம் அன்னை அஞ்சுகம் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (35). கட்டுமான ஒப்பந்தராக உள்ளார். இவர் தன்னிடம் வேலை செய்து வரும் 4 வடமாநில தொழிலாளர்களை, கட்டுமான பணிகள் நடந்து வரும் அடையாளம்பட்டு, மில்லினியம் டவுன் தெருவில் கூடாரம் அமைத்து, தங்க வைத்து, கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதம் 31-ம் தேதி 4 வடமாநில தொழிலாளர்களும் கூடாரத்தில் சமைத்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு ஆணும், பெண்ணும் 4 வடமாநில தொழிலாளர்களையும் உருட்டுக் கட்டையால் தாக்கி உள்ளனர். வலி தாங்க முடியாமல், அந்த 4 தொழிலாளர்களும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது, அவர்களது கூடாரத்தில் வைத்திருந்த செல்போன்கள், கைக் கடிகாரம் மற்றும் ரூ.7,000 பணத்தை அந்த இருவரும் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வானகரம் போலீஸில் வடமாநில தொழிலாளர்கள் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது, கீழ் அயனம்பாக்கத்தை சேர்ந்த ஜெய பிரகாஷ் (24), அவரது மனைவி திவ்யா (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து பணம், செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x