Published : 05 Mar 2025 04:42 PM
Last Updated : 05 Mar 2025 04:42 PM
சென்னை: மெரினா கடற்கரை பகுதியில் போலீஸாரின் வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 28 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 4 பேரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்கும் வகையில் ரோந்து மற்றும் வாகன சோதனை பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அதன்படி, செவ்வாய்க்கிழமை இரவு மெரினா காமராஜர் சாலையில், அண்ணா சதுக்கம் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் இருந்த 4 பேரிடமும் போலீஸார் விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
இதையடுத்து, அவர்களை கீழே இறக்கி விட்டு, காரை சோதனை செய்தபோது, அதில் தங்க நகைகள் பெட்டிப் பெட்டியாக இருந்து. இதையடுத்து இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து விசாரணை நடத்தினர். இதில், காரில் 28 கிலோ தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில் காரில் இருந்தவர்கள் பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நகைக்கடை மேலாளர்கள் பிரகாஷ் (27), கிரண் (27), சவுகார்பேட்டையைச் சேர்ந்த தனியார் நகைக்கடை மேலாளர் அனில் (45) மற்றும் அவர்களது கார் ஓட்டுநர் பெருங்குடி பால் (31) என்பது தெரிந்தது.
பெங்களூருவில் இருந்து சவுகார்பேட்டை, தியாகராய நகரில் உள்ள பிரபல நகை கடைகளுக்கு விநியோகம் (சப்ளை) செய்ய வந்ததாக பிடிபட்ட 4 பேரும் தெரிவித்தனர். ஆனாலும், கொண்டு வரப்பட்ட நகைக்கு உரிய ரசீதுகள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட 28 கிலோ தங்க நகைகளும் வணிகரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுஒருபுறம் இருக்க பிடிபட்ட 4 பேரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT