Published : 04 Mar 2025 05:47 PM
Last Updated : 04 Mar 2025 05:47 PM
நாமக்கல்: அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் கைதான இளைஞருக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
நாமக்கல் என்ஜிஓ காலனியைச் சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் ஆர்.ஆர்.பி.சுரேஷ் (48). இவர் சேந்தமங்கலம் அதிமுக ஜெ.பேரவை ஒன்றிய செயலாளராக இருந்தார். மேலும், அரசு ஒப்பந்த பணிகள், ரியல் எஸ்டேட், பைனான்ஸ் நிறுவனம் போன்ற தொழில்களிலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 20-ம் தேதி அவரது சொந்த ஊரான சேந்தமங்கலம் வெட்டுக்காட்டில் சுரேஷ் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
நில விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக சேந்தமங்கலம் மலைவேப்பங்குட்டையைச் சேர்ந்த விமல்குமார் (28), சேந்தமங்கலம் வெட்டுக்காட்டைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் சிவக்குமார் (43) ஆகிய இருவரையும் பேளுக்குறிச்சி காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணை நிறைவடைந்ததையடுத்து இன்று அதன் மீது தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்படி வழக்கில் கைதான விமல்குமாருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரத்து 500 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கில் கைதான அரசுப் பேருந்து ஓட்டுநர் சிவக்குமார் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ம் தேதி உயிரிழந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT