Last Updated : 28 Feb, 2025 04:48 PM

 

Published : 28 Feb 2025 04:48 PM
Last Updated : 28 Feb 2025 04:48 PM

சென்னையில் ‘போலி மாநகராட்சி அதிகாரிகள்’ 3 பேர் கைது - சிக்கியது எப்படி?

சென்னை: சென்னையில் போலி மாநகராட்சி அதிகாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் கடைகளுக்கு உரிமம் வழங்கும் சென்னை மாநராட்சியின் 5-வது மண்டல (கோட்டம் 62) உரிம ஆய்வாளர் லோகநாதன் 26-ம் தேதி சிந்தாதிரிப்பேட்டை, மேற்குகூவம் சாலையில் உள்ள மீன்கடை ஒன்றில் ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது, அந்த பகுதியில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் துறையின் உரிமம் ஆய்வாளர், உரிமம் உதவியாளர் என போலியான அடையாள அட்டைகள் வைத்துக் கொண்டு, ஒருவருக்கு மீன் கடைக்கான உரிமம் பெற்று தருவதாக கூறினர்.

மேலும், மற்றொருவருக்கு போலியான உரிமம் வழங்கி ரூ.15,800 பெற்றனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உரிம ஆய்வாளர் லோகநாதன் இதுகுறித்து சிந்தாரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாநகராட்சியின் உரிம ஆய்வாளர் போல் நடித்து, போலி உரிமம் வழங்கிய ராயபுரம் ஆஞ்சநேயா நகரைச் சேர்ந்த பால்ராஜ் என்ற ரோகித் (30), புதுப்பேட்டை கொய்யா தெருவைச் சேர்ந்த சந்திரசேகர் (37), கொருக்குப்பேட்டை தர்மராஜா கோயில் தெருவைச் சேர்ந்த பாபு (30) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து சுகாதாரத்துறையின் போலி அடையாள அட்டைகள் மற்றும் 1 போலி உரிமம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x