Published : 23 Feb 2025 07:52 PM
Last Updated : 23 Feb 2025 07:52 PM
கோவை: கோவை நகைக்கடையில் போலி காசோலை வழங்கி ரூ.12 லட்சம் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக பெண்கள் உள்ளிட்ட நான்கு பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவை கிராஸ்கட் சாலையில் செயல்பட்டு வரும் தங்க நகை கடைக்கு தமிழகம் முழுவதும் கிளைகள் உள்ளன. கடைக்கு கடந்த சில நாட்களுக்கு முன் காரில் வந்த இரு பெண்கள் மற்றும் இரு ஆண்கள் கடை ஊழியர்களிடம் தொழிலதிபர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். பண்டிகைக்கு அன்பளிப்பாக வழங்க வைர நெக்லஸ் வேண்டும் என தெரிவித்தனர். ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள வைர நெக்லஸ் தேர்வு செய்து பெற்றுக் கொண்டனர். காசோலையை கடை ஊழியர்களிடம் கொடுத்தனர். தொழிலதிபர்கள் என, நம்பிய கடை ஊழியர்கள், காசோலையுடன், முகவரி மற்றும் தொடர்பு எண்களை பெற்று கொண்டனர்.
நான்கு பேரும் வைர நகையை எடுத்து சென்றனர். காசோலையை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லை என திரும்பி வந்து விட்டது. இதனால் அதிர்ச்சியான ஊழியர்கள் நகை வாங்கியவர்கள் வழங்கிய எண்ணில் தொடர்பு கொண்டனர். 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து நகைக்கடை நிர்வாகம் சார்பில், காட்டூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு மோசடியில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர். போலி முகவரி கொடுத்து ஏமாற்றி சென்றது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT