Published : 11 Feb 2025 07:23 AM
Last Updated : 11 Feb 2025 07:23 AM

சென்னை | முதி​யவரிடம் ரூ.2 லட்சம் திருடியவர் கூட்டாளியுடன் கைது

சென்னை: முதியவரை நோட்டமிட்டு, அவரது இருசக்கர வாகனத்தில் இருந்த ரூ.2 லட்சம் மற்றும் வங்கி ஆவணங்களை திருடிச் சென்ற நபர் கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார்.

சென்னை வில்லிவாக்கம், தாதங்குப்பம், ராஜீவ்காந்தி நகர், 3-வது தெருவைச் சேர்ந்தவர் கேசவன் (75). இவர், கடந்த 3-ம் தேதி மதியம் வில்லிவாக்கம், வடக்கு மாட வீதியில் உள்ள வங்கிக்குச் சென்றார். வங்கியிலிருந்து ரூ.2 லட்சத்தை எடுத்து, அந்த பணத்தை தனது இருசக்கர வாகனத்தில் வைத்தார்.

தொடர்ந்து அதே பகுதியில் உள்ள காய்கறிக் கடை அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு சற்று தொலைவில் காய்கறி வாங்கிவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது, இருசக்கர வாகனத்திலிருந்த ரூ.2 லட்சம், வங்கி பாஸ் புத்தகம், காசோலை புத்தகம் மற்றும் செல்போன் அடங்கிய பை திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக அவர் இதுகுறித்து வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, அக்காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, சம்பவ இடத்தைச் சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

இதில், முதியவர் கேசவனின் இருசக்கர வாகனத்திலிருந்து பணம், ஆவணங்களை திருடிச் சென்றது வில்லிவாக்கம், ராஜமங்கலம் 3-வது தெருவைச் சேர்ந்த ஸ்டீபன் (34), வில்லிவாக்கம், வடக்கு ஜெகநாதன் நகரைச் சேர்ந்த கிஷோர்குமார் (26) என்பது தெரிந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

ஸ்டீபன் மீது தருமபுரி மாவட்டத்தில் 7 குற்ற வழக்குகளும், கிஷோர்குமார் மீது ஒரு கொலை முயற்சி வழக்கும் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து, இருவரும் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x