Published : 28 Jan 2025 06:30 AM
Last Updated : 28 Jan 2025 06:30 AM
சென்னை: மாணவர்கள், ஐ.டி. ஊழியர்களை குறிவைத்து கொக்கைன் போதைப் பொருள் விற்பனை செய்ததாக இருவரை போலீஸார் கைது செய்தனர். போதைப் பொருட்களுக்கு எதிராக சென்னை போலீஸார் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு என்ற பெயரில் சிறப்பு பிரிவும் உருவாக்கப்பட்டுள்ளது. அப்பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சூளைமேடு போலீஸாருடன் இணைந்து சூளைமேடு, அண்ணா நெடும்பாதை மற்றும் ராகவன் தெரு சந்திப்பு அருகே கண்காணித்தனர்.
அப்போது, அங்கு நின்றிருந்த இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து, அவர்களது உடமைகளை சோதித்தபோது அதிலிருந்து கொக்கைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பிடிபட்டது ராயப்பேட்டை, சீனிவாச பெருமாள் கோயில் 3-வது தெருவைச் சேர்ந்த பயாஸ் அகமது(31), கோயம்பேட்டைச் சேர்ந்த சந்திரசேகர்(35) ஆகிய இருவரை கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 4 செல்போன்கள், 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
முன்னதாக நடைபெற்ற விசாரணையில் கைதான இருவரும் மாணவர்கள், ஐ.டி ஊழியர்களை குறிவைத்து போதைப் பொருளை விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT