Published : 27 Jan 2025 07:59 PM
Last Updated : 27 Jan 2025 07:59 PM
ராமேசுவரம்: ராமேசுவரம் அக்னிதீர்த்த கடற்கரை உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவர் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.
ராமேசுவரம் அக்னிதீர்த்தக் கடற்கைரையில் நீராடிய பக்தர் ஒருவர், கடற்கரைக்கு எதிரே இருந்த லெட்சுமி டீ ஸ்டால் மற்றும் உடை மாற்றும் அறையில் உடை மாற்றச் சென்றுள்ளார். அங்கு அறையின் மறைவான இடத்தில் சிறிய அளவில் ரகசிய கேமரா இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன், ராமேசுவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸார் அங்கிருந்த ரகசிய கேமராவை பறிமுதல் செய்து, லெட்சுமி டீ ஸ்டால் மற்றும் உடை மாற்றும் அறையை நடத்தி வந்த ராஜேஷ் கண்ணன் (33) மற்றும் அங்கு டீ மாஸ்டராக பணிபுரிந்த மீரான் மைதீன் (37) ஆகிய இருவரையும் கடந்த டிசம்பர் 23-ல் கைது செய்து ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், ராஜேஷ் மற்றும் மீரான் மைதுன் ஆகியோர் மீது குண்டா் தடுப்புச்சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சந்தீஷ் பரிந்துரையின் கீழ் 2 போ் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இன்று, இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT