Published : 27 Jan 2025 06:26 PM
Last Updated : 27 Jan 2025 06:26 PM
சென்னை: சென்னையில் பள்ளி மாணவிகள் 3 பேரை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி மாணவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெரம்பூரைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 24-ம் தேதி, இவர் தோழி வீட்டுக்கு சென்று வருகிறேன் என வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. மகள் மாயமானது குறித்து மாணவியின் பெற்றோர் திரு.வி.க. நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் பேரில் போலீஸார், வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், மாணவியின் தோழிகளான அதே பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி மற்றும் வில்லிவாக்கத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியும் மாயமானது தெரியவந்தது.
விசாரணையில், மாணவிகள் 3 பேரையும் மாணவர்கள் 3 பேர், காதல் வலையில் வீழ்த்தி அழைத்து சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் சம்பந்தப்பட்ட அனைவரது செல்போன் மூலம் அவர்கள் இருபிடம் மற்றும் முகவரி கண்டு பிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டது. இதில், மாணவிகளை அழைத்துச் சென்றது ஐடிஐ மாணவர் மற்றும் சிறுமியின் நண்பர்களான 16 மற்றும் 17 வயதுடைய இருவர் என்பது தெரியவந்தது.
அதாவது, காதலிப்பதாக கூறி பள்ளி மாணவிகள் 3 பேரையும், அவர்களது காதலர்களான மாணவர்கள் 3 பேர் கடந்த 24-ம் தேதி இரவு பெரம்பூரில் உள்ள அரசு நூலகம் ஒன்றின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று அவர்களை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக செயல்பட்ட அவர்களது நண்பர்கள், யாரேனும் ஆட்கள் அப்பகுதிக்கு வருகிறார்களா? என நோட்டம் விட்டுள்ளனர்.
இதையடுத்து மாணவர்கள் 3 பேர் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் யுகேஷ், கலிமுல்லா உட்பட மொத்தம் 6 பேரை போலீஸார் கைது செய்தனர். கைதான யுகேஷ், கலிமுல்லா மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் உள்ளன. கைதானவர்களில் 3 சிறுவர்கள் சீர்திருத்தபள்ளியிலும் மற்ற 3 பேரும் சிறையிலும் அடைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் காப்பகம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு திரு.வி.க நகர் போலீஸாரிடமிருந்து செம்பியம் மகளிர் போலீஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மாணவிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT