Published : 19 Jan 2025 11:26 AM
Last Updated : 19 Jan 2025 11:26 AM
சென்னை: ரவுடி பன்னீர்செல்வம் கொலை குறித்து விசாரிக்க ரவுடி பாம் சரவணனை ஆந்திரா அழைத்துச் செல்ல போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை புளியந்தோப்பை சேர்ந்த பிரபல ரவுடி பாம் சரவணன். இவரை கடந்த 14ம் தேதி இரவு தனிப்படை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். அப்போது அவரிடம் இருந்து நாட்டு வெடிகுண்டுகள், கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், துப்பாக்கிச் சூட்டில் காலில் காயம் ஏற்பட்டதால், பாம் சரவணனை போலீஸார் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு காலில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது, அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில் அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளராக இருந்தவரும் பாம் சரவணனின் அண்ணன் தென்னரசுவின் கொலை வழக்கில் தொடர்புடையவருமான கோயம்பேட்டைச் சேர்ந்த ரவுடி பன்னீர்செல்வத்தை ஆந்திராவுக்கு கடத்தி சென்று கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
ரவுடி பன்னீர்செல்வம் கடந்த 2018ம் ஆண்டு முதல் காணவில்லை என அவரது குடும்பத்தினர் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்திருந்தனர். இந்த நிலையில் அவரை கொன்றதாக பாம் சரவணன் போலீஸாரிடம் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து பன்னீர்செல்வம் காணாமல் போன வழக்கை கொலை வழக்காக போலீஸார் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நீதிமன்ற காவலில் இருக்கும் பாம் சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். மேலும், ஆந்திரா மாநிலம் அழைத்து சென்று, பன்னீர்செல்வத்தை கொலை செய்யது எரிக்கப்பட்ட பகுதியில் தடயங்கள் ஏதேனும் கிடைக்கிறதா என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT