Published : 18 Jan 2025 01:00 PM
Last Updated : 18 Jan 2025 01:00 PM
கரூர்: கரூர் அருகே 16 வயது பள்ளி மாணவியைபாலியல் வன்கொடுமை செய்த காவலர் போக்சோ (குழந்தைளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம்) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம் அரங்கநாதன்பேட்டையைச் சேர்ந்தவர் இளவரசன் (38). இவர் கரூர் வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் 16 வயது பள்ளி மாணவிக்கு இளவரசன் அடிக்கடி பாலியல் தொல்லை அளித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவி அவரது தாயிடம் தெரிவித்த நிலையில் மாணவியின் தாய் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் இளவரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து இளவரசன் கரூர் நீதிமன்றத்தில் இன்று (ஜன. 18-ம் தேதி) ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளரை தாக்கிய வழக்கில் இளவரசன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT