Published : 16 Jan 2025 06:12 PM
Last Updated : 16 Jan 2025 06:12 PM

தனுஷ்கோடி அருகே கார் - வேன் மோதி விபத்து: 14 சுற்றுலா பயணிகள் காயம்

தனுஷ்கோடியில் விபத்துக்குள்ளான வேன்.

ராமேசுவரம்: தனுஷ்கோடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வந்த வேனும், காரும் மோதிய விபத்தில் 14 சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர்.

சென்னையைச் சேர்ந்த 20 பேர் வேனில் ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு வேனில் சுற்றுலா வந்து இன்று பிற்பகல் ராமேசுவரத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். வேன் தனுஷ்கோடி - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் கோடிலிங்கசுவாமி கோயில் அருகே வந்து கொண்டிருந்தபோது, ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு சுற்றுலா வந்த கார் ஒன்று சாலையில் முந்தி செல்லும் பொழுது வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் வந்த சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (45), யுவராஜ் (34), பவானி (30), நித்திஸ்வரன் (05), ஆனந்தி (47), லாவண்யா (26), தட்சிணாமூர்த்தி (61), ராணி (50), ராமலிங்கம் (60) ஆகிய ஒன்பது பேருக்கும், காரில் வந்த பெங்களூருவைச் சேர்ந்த சந்திரசேகர் (34), அமிர்தம் (54), மன்மதன் (60), காயத்ரி (28), கிருஷ்ணவேணி (25) ஆகிய 05 பேருக்கு காயம் ஏற்பட்டது.

காயம் ஏற்பட்டவர்கள் ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைகளில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து தனுஷ்கோடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x