Published : 16 May 2024 01:14 PM
Last Updated : 16 May 2024 01:14 PM

சிவகாசியில் காலைக் கடன் கழிக்கச் சென்ற தாய், மகள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

சிவகாசி

சிவகாசி: சிவகாசியில் காலைக் கடன் கழிக்கச் சென்ற தாய், மகள் இருவரும் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து ஶ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சிவகாசி காந்தி நகரைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி(54). இவர்களது மகள் தனலட்சுமி (28). இவர் திருமணமாகி கணவர் மற்றும் குழந்தை உடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். தமிழ்ச்செல்வி வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி ஆவார்.

இன்று காலை தமிழ்ச்செல்வி, தனலட்சுமி இருவரும் காலைக் கடன் கழிப்பதற்காக ரயில் பாதையை கடந்து சென்றுள்ளனர். அப்போது தமிழ்ச்செல்வி ரயில் தண்டவாளத்தில் நடந்து வந்துள்ளார். அப்போது ரயில் வருவதை கண்ட தனலட்சுமி, தமிழ்ச்செல்வியை காப்பாற்ற முயன்ற போது, செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த ரயில்வே போலீஸார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ஶ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x