Published : 18 Sep 2015 09:05 AM
Last Updated : 18 Sep 2015 09:05 AM
நல்ல திறமையான அணி அமைந்தால் படத்தயாரிப்பு என்பது மிகவும் சுலபம் என்று 'தூங்காவனம்' ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கமல் பேசினார்.
ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் கமல், த்ரிஷா, மதுஷாலினி, பிரகாஷ்ராஜ், யூகி சேது உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'தூங்காவனம்'. ஜிப்ரான் இசையமைத்து இருக்கும் இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளின் ட்ரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
'தூங்காவனம்' படத்தின் மொத்த குழுவினரும், ட்ரெய்லர் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டார்கள். இவ்விழாவில் கமல்ஹாசன் பேசியது:
" தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் படம் பார்க்கிறவர்கள் மொத்தம் 14 கோடி பேர் இருக்கிறார்கள். 2 மொழி ரசிகர்களையும் ‘தூங்காவனம்’ கண்டிப்பாக திருப்திப்படுத்தும்.
ஒரே சமயத்தில் ஒரே படத்தை 2 மொழிகளிலும் பண்ணுவது சுலபம் அல்ல. நான் ஏற்கனவே இதுபோல் 24 படங்கள் பண்ணியிருக்கிறேன். 2 மொழிகளிலும் ஒரே சமயத்தில் எப்படி சுலபமாக படம் பண்ணுவது என்பதை இப்படத்தில் கற்றுக் கொண்டேன்.
ஒரு படத்தை தயாரிப்பது மிகவும் சுலபம். அதற்கான திட்டமிடுதலும், திறமையாக செயல்படுத்துவதும் தான் மிகவும் முக்கியம். அதற்கு நல்ல ஆட்கள் தேவை. இப்படத்தில் எனக்கு அதே போன்ற ஒரு நல்ல அணி அமைந்திருக்கிறது. இனிமேல் ராஜ்கமல் நிறுவனம் மிகவும் உத்வேகத்துடன் நிறைய படங்களைத் தயாரிக்கும். 'தூங்காவனம்' படத்தைத் தொடர்ந்து எனது அடுத்த படத்துக்கான வேலைகளைத் தொடங்கி விட்டோம்" என்று கமல் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT