Published : 11 Aug 2015 03:47 PM
Last Updated : 11 Aug 2015 03:47 PM
"'பாகுபலி' படத்துக்காக பல பாராட்டுகள் கிடைத்துள்ளன. ஆனால் கவிஞர் வைரமுத்துவிடமிருந்து வந்துள்ள இந்த பாராட்டு என்ன உலுக்கிவிட்டது என இயக்குநர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.
இந்தியளவில் வரவேற்பையும், வசூலையும் அள்ளிக் குவித்து வரும் படம் 'பாகுபலி'. ராஜமெளலி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
இப்படத்தை பாராட்டி கவிஞர் வைரமுத்து, இயக்குநர் ராஜமெளலிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில் வைரமுத்து கூறியிருப்பது:
"'பாகுபலி' பார்த்தேன். அந்தத் திகைப்பிலிருந்து இன்னும் நான் விடுபடவில்லை. படத்தின் காட்சிப் படிமங்கள் என் நெற்றிக்குச் சில செண்டிமீட்டர் தூரத்தில் பட்டாம் பூச்சிகளாய்ப் படபடத்துக் கொண்டேயிருக்கின்றன.
இது செல்லுலாய்டில் எழுதப்பட்ட இன்னொரு இதிகாசமா? கவிதையின் விஸ்வரூபமா? காட்சிகளின் திருவிழாவா? என்றே வியக்கத் தோன்றுகிறது.
'பாகுபலி'யின் முதல் பார்வையாளர் நீங்கள் தான். உலகத்தின் கண்கள் பார்ப்பதற்கு முன்பு உங்கள் உள்ளத்தின் கண்களால் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டீர்கள்.ஆனால் அப்படிப் பார்க்கப்பட்டதில் ஒரு மில்லிகிராமும் குறையாமல் அதைக் கலைப்படுத்திய உங்கள் உழைப்பு - தொழில் நுட்பத்திறன் - கலை ஆளுமை - உங்கள் வலி - துடிப்பு - தவம் - எல்லாவற்றையும் என்னால் புரிந்துகொள்ள முடிவதால் வியந்து நிற்கிறேன்.
சினிமா என்பதே நம்பவைக்கப்படும் ஒரு தொழில்நுட்ப பொய்தான். அந்த நம்பகத்தனமையை ஒரு இயக்குநர் தான் உருவாக்குகிறார். அருவியும், பனியும் முகத்தில் வந்து முட்டுகின்றன. உடலும் உயிரும் நனைகின்றன.
பட்டாம்பூச்சிகளால் சூழப்பட்ட கனவுப்பெண் பட்டாம்பூச்சிகள் பறந்து போவது போல் கலைந்து போனாள் என்று முடித்திருப்பதில் ராஜமெளலிக்குள் இருக்கும் ஒரு கவிஞனைப் பார்த்தேன்.
வழிந்தோடும் தாமரைப்பூ சிற்பத்தின் கைகளுக்குள் சிக்கிக் கொள்ளும் காட்சிப்படிமத்தில் ஒரு ஓவியனின் உத்தியைப் பார்த்தேன்.
'பாகுபலி'யின் வருகை தந்த மகிழ்ச்சியை மக்கள், இசைக்கலைஞர்கள், நடனமணிகள் மூலம் காட்டியதோடு ஒரு யானையின் கண்ணிலும் பிரதிபலிக்கச் செய்ததில் ஒரு படைப்பாளியின் முழுமை பார்த்தேன்.
கட்டப்பா உறையைத் தொட பாகுபலி வாளை உருவ வெட்டப்பட்ட முண்டம் தொடர்ந்து ஓடும் காட்சியில் கம்பனின் கற்பனை கண்டேன்.
யுத்தகளக் காட்சிகளை இத்தனை போர்த்தந்திரங்களோடும், பிரம்மாண்டத்தோடும் இதற்குமுன் யாரும் படைத்ததில்லை. நவீன தொழில் நுட்பத்தின் அனைத்துக் கூறுகளையும் ஒரு சொட்டு ஒழுகவிடாமல் பயன்படுத்தியிருக்கிறீர்கள்.
இந்திய சினிமாவின் உலக விலாசமாய் உங்கள் பெயர் நாளை பொறிக்கப்படும். உங்களைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன். உலகத்தோடு போட்டிபோட இதோ எங்களில் ஒருவன் வந்துவிட்டான் என்று என் உதடுகள் முணுமுணுக்கின்றன.
வாழ்த்துக்கள் ராஜமெளலி" என்று குறிப்பிட்டிருந்தார் வைரமுத்து.
வைரமுத்து கடிதத்தை இயக்குநர் ராஜமெளலி தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து "'பாகுபலி' படத்துக்காக பல பாராட்டுகள் கிடைத்துள்ளன. ஆனால் கவிஞர் வைரமுத்துவிடமிருந்து வந்துள்ள இந்த பாராட்டு என்ன உலுக்கிவிட்டது. இதை பாராட்டாக எடுத்துக்கொள்ள எனக்கு தைரியமில்லை. இதை அந்த சாதனையாளரின் ஆசிர்வாதமாக மட்டுமே என்னால் எடுத்துக் கொள்ள முடியும். ஒரு சிறந்த ஆசான் தனது மாணவக்கு தரும் ஆசிர்வாதமாக எடுத்துக் கொள்கிறேன்." என்று தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT