Published : 24 Aug 2015 05:53 PM
Last Updated : 24 Aug 2015 05:53 PM
தமிழ் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் ’நாயகி’ படத்தில், 20 வயது பெண்ணாக த்ரிஷா நடிக்கவுள்ளார் என படத்தின் இயக்குநர் கோவி தெரிவித்துள்ளார். மேலும் இந்த கதாபாத்திரத்துக்காக த்ரிஷா கடந்த சில மாதங்களாகவே எடை குறைத்து, தன்னை தயார்படுத்தி வருகிறார்
"இந்த கதாபாத்திரம் பார்க்க எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் நான் அவரிடம் கூறவில்லை. கதையை கேட்ட பிறகு அவரே என்ன தேவை என்பதை புரிந்து கொண்டார். படத்தில் நாயகன் இருந்தாலும் த்ரிஷா தான் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார்.
நான் அவரது மிகப்பெரிய விசிறி. அவரை வைத்தே படம் இயக்க வேண்டும் என்பது என் கனவு. கதை கேட்ட 10 நிமிடத்தில் அவர் ஒப்புக்கொண்டது மகிழ்ச்சி. 1980-களில் இருந்த பாணியில் த்ரிஷாவின் தோற்றம் இருக்கும். கடந்த காலத்திலும், நிகழ் காலத்திலும் நடப்பது போல கதையமைத்துள்ளேன். 98 சதவீதம் காமெடியும், 2 சதவீதம் ஹாரர் படமாகவும் இது இருக்கும்.
ராஜேஷ் என்ற தெலுங்கு நடிகரை தமிழில் அறிமுகப்படுத்துகிறேன். அதே போல சென்றாயனை தெலுங்கில் அறிமுகப்படுத்துகிறேன்.
படத்தில் இரண்டாவது நாயகிக்கான தேடல் நடந்து வருகிறது. அதுவும் முக்கியப் பாத்திரமாக இருக்கும். மேலும் இந்தப் படத்துக்காக நாயகி த்ரிஷா 3 நிமிடப் பாடல் ஒன்றை பாடவுள்ளார். அந்தப் பாடல் டைட்டிலுக்காகவும், படத்திலும் பயன்படுத்தப்படும். 60 சதவீத படப்பிடிப்பு சென்னையிலும், மீதம் ஹைதராபாதிலும் நடைபெறும்". இவ்வாறு இயக்குநர் கோவி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT