Published : 11 Aug 2015 12:11 PM
Last Updated : 11 Aug 2015 12:11 PM
விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் 'வாலு' திரைப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'வாலு'. நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வந்த இப்படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிட முடிவு செய்தது.
அதனைத் தொடர்ந்து நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி வாங்கிய கடன் விவகாரங்கள் தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூலை 17ம் தேதி வெளியீட்டில் இருந்து ஒத்திவைக்கப்பட்டது.
சிம்பு, டி.ராஜேந்தர் ஆகியோர் வழக்கு தொடர்ந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஒவ்வொரு பிரச்சினையாக முடித்து வந்தார்கள். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 14ம் தேதி வெளியீடு என்று முடிவு செய்யப்பட்டது.
ஆனால், 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படத்துக்காக உதயநிதி ஸ்டாலின் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்துவிட்டதால் 'வாலு' வெளியாவதில் சிக்கல் நீடித்தது. இதனைத் தொடர்ந்து சிம்பு ரசிகர்கள் பலரும் உதயநிதி ஸ்டாலினை திட்டித் தீர்த்து வந்தார்கள். இதற்கு உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
தற்போது குறைவான திரையரங்குகளே கிடைத்திருந்தாலும், 'வாலு' படத்தை வெளியிட டி.ராஜேந்தர் முடிவு செய்திருக்கிறார். இன்று வெளியாகி இருக்கும் விளம்பரத்தில் திரையரங்க பெயர்களோடு ஆகஸ்ட் 14ம் தேதி வெளியீடு என்ற விளம்பர வெளியாகி இருக்கிறது.
மேலும், ஆகஸ்ட் 14ம் தேதி வெளியீடு தகவல் குறித்த 10 விநாடிகள் கொண்ட சிறு ட்ரெய்லர்களை யு-டியூப் தளத்தில் பதிவேற்றி வருகிறார்கள். இதனால் ஆகஸ்ட் 14ம் தேதி 'வாலு' வெளியாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT