Last Updated : 21 Jul, 2015 01:18 PM

 

Published : 21 Jul 2015 01:18 PM
Last Updated : 21 Jul 2015 01:18 PM

இயக்குநர் பிரியதர்ஷன் படத்துக்கு இசையமைப்பாரா ஏ.ஆர்.ரஹ்மான்?

எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை சொல்லும் புதிய படத்தை இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கவுள்ளார். இதில் நாயகனாக பிட்ஸா 2, தெகிடி படங்களில் நாயகனாக நடித்த அசோக் செல்வன் நடிக்கவுள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா, நாசர் மற்றும் நாடக நடிகர்கள் சிலரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு ஆகஸ்ட் 10-ஆம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டு, 20 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த படம் குறித்து பேசியுள்ள இயக்குநர் பிரியதர்ஷன், "எய்ட்ஸ் பற்றிய ஆவணப் படம் எடுத்தால் அதைப் பார்க்க யாரும் வரமாட்டார்கள். அதனால் ஒரு கதையை எடுத்து அதில் எய்ட்ஸ் விழிப்புணர்வை மையக்கருவாக அமைத்துள்ளேன். காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களே இந்தத் திரைப்படம்.

எட்டு வெவ்வேறு கதாபாத்திரங்கள் ரத்தப் பரிசோதனைக்காக ஒரு கூடத்துக்கு வருகின்றனர். அதிலிருந்து, மாலை 5 மணிக்கு அவர்களது பரிசோதனை முடிவுகள் வரும் வரை கதை நடக்கிறது.

இது நகைச்சுவைப் படமாக இருக்கும் ஆனால் படம் முடியும்போது கண்டிப்பாக ரசிகர்கள் கண்ணீரோட வெளியேறுவார்கள். அப்படி ஒரு சிறிய திருப்பத்தை படத்தின் இறுதியில் வைத்துள்ளேன்" என்றார்.

பிரியதர்ஷன், சில வருடங்களுக்கு முன் இந்தக் கதையை ஆமிர் கானை வைத்து இயக்குவதாக இருந்தார். ஆனால் அது நடக்காமல் போனது. இந்தக் கதையைக் கேட்ட இயக்குநர் ஏ.எல்.விஜய் தானே தயாரிக்க முன்வந்துள்ளார். ஏ.எல்.விஜய் பிரியதர்ஷனின் சீடர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.எல்.விஜய்யின் மனைவியும், நடிகையுமான அமலா பால், ஏ.எல். அழகப்பனுடன் இணைந்து திங் பிக் ஸ்டூடியோஸ் சார்பில் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

100 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தில் பாடல்கள் கிடையாது. படம் முடிவடைந்தவுடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு படத்தை திரையிட்டு, அவர் சம்மதிக்கும் பட்சத்தில், அவரே பின்னணி இசை அமைப்பார் என பிரியதர்ஷன் தெரிவித்துள்ளார்.

ஒளிப்பதிவை சந்தோஷ் சிவனும், கலை இயக்கத்தை சாபு சிரிலும் கவனித்துக் கொள்கின்றனர். மலையாள திரையுலகில் புகழ்பெற்ற படத்தொகுப்பாளர் பீனா பால் படத்தொகுப்பு செய்யவுள்ளார்.

படத்தின் வெளியீட்டை இந்த வருடம் திட்டமிட்டுள்ள இயக்குநர் பிரியதர்ஷன், முதலில் சர்வதேச அளவில் படத்தின் முதல் பிரத்யேகக் காட்சியை திரையிட உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x