Published : 19 Jun 2017 09:08 PM
Last Updated : 19 Jun 2017 09:08 PM
விநியோகஸ்தர்கள் அனைத்துப் படங்களையும் ஆதரிக்க வேண்டும் என்று இயக்குநர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.
விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சாயிஷா, தம்பி ராமையா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'வனமகன்'. ஜூன் 23-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை விஜய் தயாரித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது.
'வனமகன்' படக்குழுவினர் கலந்து கொண்ட இந்த சந்திப்பில் இயக்குநர் விஜய் பேசியதாவது:
"ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு படம் எனக்கு முக்கியமான படமாக அமைந்திருக்கிறது. ’வனமகன்’ அப்படி ஒரு படம். ஜெயம் ரவி இல்லாமல் இந்த 'வனமகன்' இல்லை. அபாரமாக உழைத்திருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு ஒரு முழுமையான நடிகையாக சாயிஷா கிடைத்திருக்கிறார். அவர் ஒரு சிறந்த டான்ஸர்.
சில்வா மாஸ்டரின் சண்டை வடிவமைப்பு தமிழ் சினிமாவில் சிறந்த இடத்தைப் பிடிக்கும். 2010-லேயே தனஞ்ஜெயனுக்கு இந்த கதை தெரியும். இந்தப் படத்தை துவக்கும் நேரத்தில் நானும் அந்தப் படத்தில் இருப்பேன் என தனஞ்ஜெயன் முன் வந்தார். விநியோகஸ்தர்கள் தயவு செய்து எல்லாப் படங்களையும் ஆதரிக்க வேண்டும். படத்தின் பட்ஜெட்தான் விலையை நிர்ணயிக்கிறது.
நீங்கள் ஆதரவு கொடுத்தால் தான் 'பாகுபலி', 'சங்கமித்ரா' மாதிரி படங்கள் வர முடியும். தயாரிப்பாளர் சங்கம் தயாரிப்பாளர்களைக் காப்பாற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்று பேசினார் இயக்குநர் விஜய்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT