Published : 17 Nov 2025 12:33 PM
Last Updated : 17 Nov 2025 12:33 PM
என்னுடைய மந்திரவாதி நண்பன் ரவி, ஏதோ செய்த சேட்டைக்காக நயினார் ஆசிரியர் அடித்துவிட்டார். நாங்கள் வீட்டுக்கு போன பின் விளையாடுவதற்காக மீண்டும் ஸ்கூல் மைதானத்துக்கு வந்தோம். இவன் அங்கு நின்றிருந்தான்! “என்னடா இங்க நிற்கிற? என்று கேட்டோம். “இல்லடா, நயினார் வாத்யார் என் தலையில அடிச்சிட்டார். அதனால ஹெட்மாஸ்டர்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ண போறேன், அதுக்குத்தான் நிற்கிறேன். என் தலையில ரத்தம் வருதா பாரு?” என்று கேட்டான்.
நான் பார்த்த போது ஒரு துளி ரத்தமில்லை! அவனை பயமுறுத்துவதற்காக ‘என்னடா இவ்வளவு ரத்தம்” என்று சொன்னேன். அதை நிஜம் என்று நம்பி, ‘ஹெட் மாஸ்டர்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணி, இனி அவர் யாரையும் அடிக்க விடாம பண்றேன்” என்று காத்திருந்தான். “சரி, போ, உள்ள போலாம் போ” என்று சொன்னேன். அவன், “இருடா... கொஞ்சம் அழுதுக்கிறேன்” என்று ரிகர்சல் பார்த்தான். பிறகு கண்ணீரோடு அவர் அறைக்குள் நுழைந்தான். அங்கு அவர் இல்லை. பின் கதவு வழியாக ஏற்கெனவே வீட்டுக்கு சென்றிருந்தார்.
ஆறரை மணி வரை அங்கேயே நின்று வீட்டுக்குச் சென்றால், “இவ்வளவு நேரம் எங்க போயி சுத்திகிட்டு வர்ற?” என்று எனக்கு விளக்குமாற்று அடி விழுந்தது. அது ஒரு காலம். ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும் போதும் அந்த பசுமையான நினைவுகள் எனக்குள் அமர்ந்து என்னை தூண்டிக்கொண்டே இருக்கும். நடிகனான பிறகு நண்பர்கள் கூடினால், அவனுக்கு போன் செய்வோம். அவன் “ஓரு அதி” என்று தெலுங்கில் ஆரம்பிப்பான். நாங்கள் ஸ்கூலில் எப்படி கிண்டல் செய்து பேசுவோமோ, அப்படியே பேசுவோம்.
ஊருக்கு சமீபத்தில் சென்றிருந்தபோது, ரவிக்கு உடல் நலம் சரியில்லை. அவன் வீட்டுக்குச் சென்றும் பார்க்க முடியாமல் போய்விட்டது. பிறகு ஒரு நாள், அப்பா தவறிவிட்டார் என்று ரவியின் மகன் சொன்னான். அவனை கடைசி கட்டத்தில் சந்திக்க முடியாமல் போனது எனக்கு வருத்தம்தான். இருந்தாலும் அது இயற்கை. அதை ஏற்றுக்கொண்டுதானே ஆக வேண்டும். இவனைப் போல மற்றொரு நண்பன் பி.வி.தினகரன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டான். நாகப்பட்டினத்தில் அவன் வீட்டில் நானும் என் மனைவியும் அவனைப்போய் பார்த்தோம். என்னைக் கண்டதும் “மாப்ள...” என்று அழுதான்.
நான், “என்ன சாகப் போறியா? போ. ஏற்கெனவே நம்ம ஃபிரண்ட்ஸ் சில பேருபோய்ட்டாங்க. நீயும் போ. அடுத்தால எல்லோரும் பின்னாலயே வருவோம். மேல சந்திப்போம். பெஞ்ச்ல உட்கார்ந்து தோள் மேல கையை போட்டுகிட்டு, நயினார் வாத்தியார்கிட்ட அடி வாங்குவோம்” என்று சொன்னேன். சிரிக்க ஆரம்பித்துவிட்டான். “என்னடா இப்படி சொல்ற?“ன்னு கேட்டான்.
“சில உண்மைகளை யாராலயும் தடுக்க முடியாது. வாழ்க்கையில எல்லாத்தையும் அனுபவிச்சாச்சு, வேற என்ன வேணும், போயிட்டு வா?” என்று சொல்லிவிட்டு வந்தேன். கொரோனா பொதுமுடக்க காலத்தில் அவன் போய்ட்டான்! இருந்த இடத்திலிருந்தே அவனுக்கு விடை கொடுத்தேன்.
நாம் வாழ்ந்த வாழ்க்கை இன்னொரு முறை கிடைக்காது. ஆனால் அந்த நினைவுகள் பசுமையாக இருக்கும். அதை அசை போடுவதும் பேரானந்த சுகம்தான்! என்னைச் சந்திக்கிறவர்கள், “நெல்லைப் பேச்சு வழக்கையும், ஒரு மலையாளத்துக்காரர், தமிழ் பேசினால் எப்படியிருக்கும் என்பதையும் மிகத் தத்ரூபமாகப் பேசுகிறீர்களே, எப்படி?” என்று கேட்பது வழக்கம். சிலர், “சார், உங்க ஊர் திருநவேலில எந்த பக்கம்?” என்றும் கேட்டிருக்கிறார்கள்.

சென்னை வந்த புதிதில் எனக்குத் தஞ்சாவூர் பேச்சு வழக்கைத் தவிர வேறு வழக்கு தெரியாது. அப்போது அக்கா ஹேமமாலினிக்காக, நாங்கள் குடியிருந்த ராயப்பேட்டையில் இருந்து டப்பிங் தியேட்டருக்கு செல்ல டாக்ஸி பிடித்து வருவேன். அப்போது கருப்பு- மஞ்சள் வண்ணம் கொண்ட டாக்ஸி, சென்னையில் ஓடிக்கொண்டிருந்தது.
எங்கள் தெரு முனையில் சுந்தர்ராஜன் என்பவர் டாக்ஸியுடன் இருப்பார். அவரிடம் ஒருநாள், “வர்றீயளாண்ணே?” என்றேன். “வூடெங்கீது?” என்று அவர் கேட்டார். எனக்குப் புரியாமல் வேறு மொழியில் ஏதும் பேசுகிறாரோ? என்று பார்த்தேன். பிறகு “வூடெங்கீதுப்பா?” என்று மீண்டும் கேட்டார். புரியவில்லை.
“அண்ணே, எனக்குத் தமிழ்தான் தெரியும்” என்று சொன்னேன். அவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு, “ஐய, தமிய்லதாம்பா பேசினுகீறேன்” என்றார். “அண்ணே என்ன சொல்றீய?” என்று கேட்டேன். அவர், “இன்னாபா... உன்னாண்ட பேஜாரக்கீது” என்று சொல்லிவிட்டு, “வூடெங்கீதுப்பா?” என்று கையால் வீடு போன்று ஆக் ஷன் செய்து காண்பித்தார். பிறகுதான், “வீடு எங்க இருக்குன்னு கேட்கிறீயளா?” என்று கேட்டேன். “அத்ததாம்பா கேட்டுனுக்கீறேன்” என்றார்.
“அத்தெ இல்லண்ணே, அக்கா” என்றேன் நான். உடனே அவர் தலையில் அடித்துக் கொண்டார். “இன்னாப்பா பேசற நீனு, ஒன்னியுமே பிரியமாட்டங்குது” என்றார். இதுதான் சென்னை ஸ்டைல் என்பதை புரிந்து கொண்டேன். எனக்கு எப்போதும் ஒருவரைப் பார்த்ததுமே அவருடைய உடல் மொழி, பேச்சு, ஆகியவை மனதில் பதிந்துவிடும். சிலரைப் போல மோனோ ஆக்டிங் கூட செய்வேன். அப்படித்தான் எனக்கு, சென்னை பேச்சு வழக்கைக் கற்றுக் கொடுத்தது, இந்த டாக்ஸி டிரைவர் சுந்தரராஜண்ணன். அவருடன் அடிக்கடி பேசி பழகிக்கொண்டேன்.
பிறகு சினிமாவில் நடிக்க ஆரம்பித்து, நான் அறியப்பட்டவனாக ஆனபிறகு வடபழனி விஜயா மருத்துவமனை வாசலில் சுந்தரராஜண்ணனைப் பார்த்தேன். அவருக்குப் பார்வை சரியாகத் தெரியவில்லை. “அண்ணே சுந்தர் ராஜண்ணே” என்று அழைத்ததும் என் குரலை அடையாளம் கண்டு, “டேய் பாஸு, எப்டிரா கீற?” என்று முன்பு பேசியதை போலவே, “வாடா போடா” என்று பேச ஆரம்பித்துவிட்டார். ‘இவர் நடிகராகிவிட்டார், அதனால் வாடா போடா என்று அழைக்கக்கூடாது என்கிற எண்ணம் அவருக்கும் இல்லை, என்னை ஏன் அப்படி அழைக்கிறார் என்கிற நினைப்பு எனக்கும் இல்லை. இருவரும் மாறாமல் இருந்தோம்.
பிறகு டீ கடைகளுக்குச் செல்லும்போது மலையாளிகள் பேசும் தமிழைக் கவனித்தேன். ஒவ்வொருவர் பேசும் போதும் உடல் மொழியில் பேச்சுக்குத் தகுந்த மாதிரி அசைவு இருக்கும். அதை கவனிப்பதும் பிடிக்கும். பிறகு, என் ஏரியாவில் கிளன் ஆன்டனி ஸ்மித் என்ற ஆங்கிலோ- இந்திய நண்பன் இருந்தான். அவன் தமிழ் பேசினால் கூட ஆங்கிலம் வந்துவிடும். அவனிடம் பேசி பேசி அவன் ஸ்டைலை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். இப்படி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்றைக் கற்றுக்கொண்டேன்.
( திங்கள்தோறும் பேசுவோம் )
முந்தைய அத்தியாயம்: காரில் வரும் மந்திரவாதி நண்பன்: பட்டாபி எனும் நான் - எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 6
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT