Published : 08 Nov 2025 02:04 PM
Last Updated : 08 Nov 2025 02:04 PM

‘நாயகன்’ படத்தின் மறுவெளியீட்டுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘நாயகன்’ படத்தின் மறுவெளியீட்டுக்கு தடை விதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1987-ம் ஆண்டு வெளியான படம், ‘நாயகன்’. கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்
னிட்டு இப்படத்தை தற்போது மறுவெளியீடு செய்ய திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி நிறுவனத்தின் உரிமையாளரான எஸ்.ஆர்.ராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “நாயகன் படத்தின் வெளியீட்டு உரிமையை எங்களது நிறுவனம், ஏடிஎம் புரொடக் ஷன்ஸ் என்ற நிறுவனத்திடமிருந்து கடந்த 2023-ல் பெற்றுள்ளது. இதை மறைத்து வி.எஸ்.பிலிம் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவில் இப்படத்தை மறுவெளியீடு செய்ய திட்டமிட்டு வருவது முறைகேடானது. எனவே ‘நாயகன்’ படத்தை மறுவெளியீடு செய்ய தடை விதிக்க வேண்டும். ஒருவேளை மறுவெளியீடு செய்தால் வசூலாகும் தொகையை நீதிமன்றத் தில் டெபாசிட் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வி.எஸ்.இன்டர்நேஷனல் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், ‘நாயகன்’ படத்தை மறுவெளியீடு செய்ய அதிகாரப்பூர்வமான ஒப்பந்தம் தங்களிடம் உள்ளது என்றும் காப்புரிமை சட்டத்தை மீறி எதுவும் நடைபெறவில்லை என்றும் வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதி என்.செந்தில்குமார், ‘நாயகன்’ படத்தை, தான் 15-க்கும் மேற்பட்ட முறை பார்த்துள்ளதாகவும், அப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் தன்னால் நினைவு கூரமுடியும் என்றும் கருத்து தெரிவித்தார். பின்னர் தற்போதைய சூழலில் இப்படத்தின் மறுவெளியீட்டுக்குத் தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் மற்றும் விநியோக உரிமையைப் பெற்ற நிறுவனங்கள் தரப்பில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x