Published : 19 Oct 2025 12:10 PM
Last Updated : 19 Oct 2025 12:10 PM

சம்சாரம்: ‘அம்மா பசிக்குதே’ பாடல் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த ‘கல்கி’

என்​.டி.​ராம​ராவ், நாகேஸ்வர ராவ் நடித்​து, எல்​.​வி.பிர​சாத் தெலுங்​கில் இயக்​கிய ‘சம்​சா​ரம்’, வெற்றிபெற்​றதை அடுத்​து, அந்​தப் படத்தைத் தனது ஜெமினி ஸ்டூடியோ ஊழியர்​கள், அவர்​கள் குடும்​பத்​தினர், நண்​பர்​களுக்​குத் திரை​யிட்​டுக் காண்​பித்​தார், எஸ்​.எஸ்​.​வாசன். படத்​தைப் பார்த்த அவர்​கள் உருகி அழுதனர்.

இதையடுத்து அந்தப் படத்​தின் தமிழ், இந்தி உரிமையை வாங்​கிய அவர், இரண்டு மொழி​யிலும் ஒரே நேரத்​தில் ரீமேக் செய்​தார். கதை​யில் தமிழுக்கு ஏற்ப சின்ன சின்ன மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டன. ஜெமினி​யின் ‘சந்​திரலே​கா’ இந்​தி​யில் பெரும் வரவேற்​பைப் பெற்​ற​தால், தமிழ் நடிகர்​களை இந்​திப் பார்​வை​யாளர்​கள் ஏற்​றுக்​கொள்​வார்​கள் என்று நம்​பி​னார், வாசன். ஒரே செட், உடைகள் போன்​றவை இரண்டு படங்​களுக்​கும் போதும் என்​ப​தால், சிக்​க​ன​மாகப் படத்தை உரு​வாக்க முடிந்​தது. ஆனால், பெரும்​பாலான தென்​னிந்​திய நடிகர்​களுக்கு இந்தி தெரி​யாது என்​ப​தால் டப்​பிங் கலைஞர்​களைப் பயன்​படுத்த முடிவு செய்​தார்​கள். இதற்​காகவே, ஹாலிவுட் பாணி டப்​பிங் ஸ்டூடியோவை அமைத்​தார் வாசன்.

இந்​திப் படத்தை எஸ்​.எஸ்​.​வாசனும் தமிழ்ப் படத்தை சந்​துரு​வும் இயக்​கி​னார்​கள். இந்த சந்​துரு, ஜெமினி ஸ்டூடியோ​வில் தலைமை படத்​தொகுப்​பாள​ராக இருந்​தவர். அதிக படங்​களை இயக்கி இருக்க வேண்​டிய இவர், ஒரு விபத்​தில் இளம் வயதிலேயே உயி​ரிழந்​தது, ஜெமினி ஸ்டூடியோவுக்​கும் தென்​னிந்​திய சினி​மாவுக்​கும் இழப்பு என்று அக்​கால​கட்​டத்​தில் கூறப்​பட்​டது.

இப்​படத்​துக்​குத் தமிழில், ‘சம்​சா​ரம்’ என்​றும் இந்​திக்கு ‘சன்​சார்’ என்​றும் தலைப்பு வைக்​கப்​பட்​டது. எம்​.கே.​ரா​தா, புஷ்பவல்​லி, குமாரி வனஜா, ஸ்ரீராம், சுந்​தரி​பாய், டி.ஆர்​.​ ராமச்​சந்​திரன், டி.​பாலசுப்​பிரமணி​யம், ஆர்​.​பாலசுப்​பிரமணி​யம், மாஸ்​டர் சேது, ரத்​ன​பாபா ஆகியோர் நடித்​தனர்.குடும்ப கதை​தான். மனை​வி, இரண்டு குழந்​தைகளு​டன் மகிழ்ச்​சி​யாக வாழும் ஓர் அலு​வலக ஊழியருக்கு குடும்​பத்​துக்​குள் ஏற்​படும் பிரச்​சினை​கள் என்ன மாதிரி​யான சிக்​கல்​களைக் கொண்டு வரு​கின்றன என்​பது கதை.

1951-ம் ஆண்டு ஆக்​.19-ல் வெளி​யாகி வெற்​றி​பெற்​றது இந்​தப் படம். உணர்​வுப்​பூர்​வ​மான கதைக்​களம், எம்​.கே.​ரா​தா, புஷ்பவல்லி உள்​ளிட்​டோரின் சிறந்த நடிப்​பு, பாடல்​கள் இப்​படத்​துக்கு பிளஸ் ஆக இருந்​தன. படத்​தின் வெற்​றிக்கு இசை, மற்​றொரு காரண​மாக இருந்​தது. புகழ்​பெற்ற கர்னாடக இசைக்​கலைஞர் சங்கர சாஸ்​திரி இசை அமைத்​தார். எம்​.டி.​பார்த்​த​சா​ரதி மேற்​பார்​வை​யிட்​டார். இதில் இடம்​பெற்ற ‘சம்​சா​ரம்​... சம்​சா​ரம்​...’ என்ற பாடல் மூலம் ஏ.எம்​.​ராஜா பாடக​ராக அறி​முக​மா​னார். ‘ஆராரோ ஆராரோ அருமை குமா​ரா’,‘கடகட கடகட லொட லொட வண்​டி’,‘அம்மா பசிக்​குதே தாயே பசிக்​கு​தே’,‘ஏழை எங்கு செல்​வேன்’ உள்பட பாடல்​கள் அனைத்​தும் வரவேற்​பை பெற்றன.

இப்​படம் வெற்​றி​பெற்​றாலும் கடுமை​யான விமர்​சனங்​களும் எழுந்​தன. படத்​தின் ஒரு காட்​சி​யில் வறுமை காரண​மாகப் பெற்ற தாயே தனது குழந்​தைகளைப் பிச்சை எடுக்க அனுப்​பு​வார். அப்​போது அவர்​கள், ‘அம்மா பசிக்​கு​தே’ என்ற பாடலைப் பாடி ஒவ்​வொரு வீடாகச் சென்று பிச்சை எடுப்​பார்​கள். இக்​காட்​சியை ‘எந்த தாயும் தனது குழந்​தைகளை, எந்த நிலை​யிலும் பிச்சை எடுக்க அனு​ம​திக்க மாட்​டார்’ என்று கடுமை​யாக விமர்​சித்து தனது பத்​திரி​கை​யில் எழு​தி​னார் ‘கல்​கி’. இதே கதையைத் தழு​வி, ‘துணை​யிருப்​பாள் மீனாட்​சி’ என்ற படம் 1977-ம் ஆண்டு உரு​வானது. வலம்​புரி சோம​நாதன் இயக்​கி​யிருந்​தார். அதில், சிவகு​மார்​, விஜயகு​மார்​, சுஜா​தா நடித்​திருந்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x