Published : 21 Sep 2025 04:19 PM
Last Updated : 21 Sep 2025 04:19 PM
‘சார்பட்டா 2’ திரைப்படம் எப்போது தொடங்கும் என்பதற்கு பா.ரஞ்சித் பதிலளித்துள்ளார்.
‘சார்பட்டா 2’ திரைப்படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், எப்போது தொடங்கும் என்பது தெரியாமல் இருக்கிறது. இது தொடர்பாக பா.ரஞ்சித் பேட்டியொன்றில் பதிலளித்துள்ளார். அதில், “‘சார்பட்டா 2’ கதையினை எழுதிவிட்டோம். ‘வேட்டுவம்’ படம் ஜூலையில் படப்பிடிப்பு முடிக்க வேண்டியது. ஆனால், படப்பிடிப்புக்கு சென்றவுடன் பெரிதாகிக் கொண்டே போகிறது.
இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது. அதை முடித்துவிட்டு ‘சார்பட்டா 2’ தொடங்கவேண்டும். அது ஒரு அரசியல் கலந்த படம். ரொம்ப சுவாரசியமாக பாக்ஸிங் விஷயங்களும் கலந்திருக்கும். இது முதல் பாகத்தின் தொடர்ச்சியா அல்லது முன் கதையா என்பதை எல்லாம் சொல்ல முடியவில்லை. ஆனால், கதையாக அற்புதமாக வந்திருக்கிறது. முதல் பாகத்தில் மக்கள் எதெல்லாம் ரசித்தார்களோ, அதை எல்லாம் வைத்து தான் நானும் தமிழ் பிரபாவும் சேர்ந்து எழுதியிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார் பா.ரஞ்சித்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சார்பட்டா’. கரோனா காலத்து பிரச்சினையினால் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT