Last Updated : 21 Sep, 2025 01:21 PM

 

Published : 21 Sep 2025 01:21 PM
Last Updated : 21 Sep 2025 01:21 PM

‘என் ரசிகர்கள் யாருடைய வம்புக்கும் செல்ல மாட்டார்கள்’ - தனுஷ்

என் ரசிகர்கள் யாருடைய வம்புக்கும் செல்ல மாட்டார்கள் என்று ‘இட்லி கடை’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசினார்.

தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் ‘இட்லி கடை’. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதில் சத்யராஜ், பார்த்திபன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினருடன் தனுஷும் கலந்து கொண்டார். இதில் அனைவருமே தனுஷின் இயக்கத்தைப் பற்றி பலரும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் தனுஷ் பேசும்போது, “எனக்கு சமையல் கலை நிபுணராக வேண்டும் என்று தான் ஆசை. அந்த ஆசையினாலோ என்னவோ தொடர்ச்சியாக சமையல் சார்ந்த படங்களாக செய்து கொண்டிருக்கிறேன். ‘ஜகமே தந்திரம்’ படத்தில் பரோட்டா, ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் டெலிவரி பாய், ‘ராயன்’ படத்தில் பாஸ்ட் ஃபுட், ‘இட்லி கடை’ படத்தில் இட்லி சுட்டுக் கொண்டிருக்கிறேன். நான் எழுதும் போது அப்படி தான் இருக்கிறது. எனக்கு வரும் கதைகளும் அப்படிதான் இருக்கின்றன. அதை தான் எண்ணம் போல் வாழ்க்கை என்பார்கள்.

இளைஞர்கள் நாம் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறோமோ அதை நம்பவேண்டும். நிஜத்தில் நடப்பது போலவே நினைக்க வேண்டும். அப்படி இருந்தால் கண்டிப்பாக சாதிக்க முடியும். உடற்பயிற்சி செய்தால் நீங்கள் நினைப்பதை சீக்கிரமாக அடைய முடியும். கருத்துச் சொல்றேன் என்று நினைக்காதீர்கள். என் வாழ்வில் நடந்ததை சொல்கிறேன். என் ரசிகர்கள் யாருடைய வம்புக்கும் செல்ல மாட்டார்கள். அதில் பெரிய கர்வமும், சந்தோஷமும் இருக்கிறது.

‘இட்லி கடை’ ஒரு சாதாரண படம். உங்களுடைய குடும்பத்துடன் சென்று சந்தோஷமாக, எமோஷனலாக பார்க்கும் வகையில் இருக்கும் என நம்புகிறோம். கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறோம். அதே போல் 9 மணிக்கு தான் படம் தொடங்கும், ஆனால் 8 மணிக்கே படத்தின் விமர்சனம் வந்துவிடும். அதெல்லாம் நம்பாதீர்கள். 9 மணிக்கு படம் வெளியானால் 12:30 மணிக்கு தான் விமர்சனங்கள் வரும். நீங்கள் படம் பார்த்து முடிவு செய்யுங்கள், அல்லது படம் பார்த்த நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்டு முடிவு செய்யுங்கள் பார்க்கலாமா வேண்டாமா என்று.

சினிமாவுக்கு இது கண்டிப்பாக தேவை. நிறைய நல்ல படங்கள் ஓட வேண்டும். அனைத்து படங்களும் ஓட வேண்டும், தயாரிப்பாளர்கள் நன்றாக இருக்க வேண்டும். சினிமாவை நம்பி நிறைய தொழில்கள் இருக்கிறது. ஆகையால் சரியான விமர்சனங்களைப் பார்த்து படம் எப்படியிருக்கிறது என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்” என்று பேசினார் தனுஷ்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x