Published : 19 Aug 2025 11:43 PM
Last Updated : 19 Aug 2025 11:43 PM
சென்னை: “ரசிகர்களுக்கு நல்ல படம் கொடுக்க வேண்டும் என்று தான் நாம் நினைக்க வேண்டும். ஒரு நல்ல படம் நிறைய வசூலிப்பது வேறு. ஆனால் ஒரு மோசமான படம் அதிகம் வசூலித்தால் அது நல்ல படம் ஆகிவிடாது” என்று இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் நடிப்பில் அவரது 100-வது படமாக வெளியாகி மாபெரும் வசூல் சாதனை செய்த படமாக மாறியது ‘கேப்டன் பிரபாகரன்’. இந்தப் படத்தை 34 வருடங்கள் கழித்து தற்போதைய 4கே தொழில்நுட்பத்தில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு மறுவெளியீடு செய்யப்படவுள்ளது. ஆர்.கே.செல்வமணி இயக்கிய இப்படம் வரும் ஆகஸ்ட் 22 அன்று ரீரிலீஸ் ஆகிறது.
இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “ஒருவர் ரூ.100 கோடி சம்பளம் வாங்கினால் உடனே எனக்கு ரூ.100 கோடி சம்பளம் வேண்டும் என்று நினைப்பது. அந்த படம் ரூ.1000 கோடி வசூலித்து விட்டதென்றால் உடனே என் படமும் ரூ.1000 கோடி வசூலிக்க வேண்டும் என்று நினைப்பது. இந்த நோய்தான் தற்போது தமிழ் சினிமாவை கெடுத்துக் கொண்டிருக்கிறது. என் படம் ஓடவேண்டும் என்று நினைக்கலாம். ஆனால் அந்த படத்தை தாண்டி ஓடவேண்டும் என்று நினைப்பது சரியான போட்டியல்ல.
ரசிகர்களுக்கு நல்ல படம் கொடுக்க வேண்டும் என்று தான் நாம் நினைக்க வேண்டும். ஒரு நல்ல படம் நிறைய வசூலிப்பது வேறு. ஆனால் ஒரு மோசமான படம் அதிகம் வசூலித்தால் அது நல்ல படம் ஆகிவிடாது. ‘கேப்டன் பிரபாகரன்’ அப்போது வெளியானபோது வெறும் 90 திரைகளில்தான் வெளியானது. ஆனால் இப்போது 500-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகிறது” என்று தெரிவித்தார்.
‘கேப்டன் பிரபாகரன்’ படத்தின் மறுவெளியீடு உரிமையை ஸ்பேரோ சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. ஆகஸ்ட் 22-ம் தேதி சுமார் 500 திரையரங்களில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT