Last Updated : 14 Aug, 2025 11:42 PM

 

Published : 14 Aug 2025 11:42 PM
Last Updated : 14 Aug 2025 11:42 PM

இளையராஜா - வைரமுத்து பிரிவுக்கு என்ன காரணம்? - கங்கை அமரன் ஓபன் டாக்!

இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் இடையிலான விரிசல் ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் கங்கை அமரன் பேசியதாவது: “கமல் இயல்பாக இருக்க மாட்டார். ரஜினிகாந்த் மிகவும் இயல்பாக இருப்பார். அனைவரும் இயல்பாக தான் இருக்க வேண்டும். அதுதான் நல்லது. கமலைப் பற்றி இன்னும் சொல்லலாம். ஆனால் அவர் இப்போது எம்.பி ஆகிவிட்டதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

‘ஊமை விழிகள்’ படத்தின் பின்னணி இசை பார்த்த பிறகு தான் இளையராஜா தனது பின்னணி இசையில் புது ஸ்டைலை உருவாக்கினார். ‘ஹேராம்’ படத்தில் புதுவிதமான பாட்டு உருவாகுவதற்கு நான் தான் காரணம். ஆனால் இதை இளையராஜாவோ கமலஹாசனோ எந்த மேடையிலும் சொல்லவில்லை. எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்.

இந்த வயதிலும் ரஜினிகாந்த் நடிக்கும் போது அவர் வயதை ஒட்டிய நானும் ஏன் இசையமைக்க கூடாது? நான் இசையமைக்க தயாராக இருக்கிறேன். 10 வருடங்கள் என்னை ஒதுக்கி வைத்திருந்தார் இளையராஜா. அந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு, வைரமுத்து அவரிடம் பாட்டு எழுதி வளர்ந்தார். அந்த காலகட்டத்தில் கல்லூரி விழாக்களில் பேசும்போதெல்லாம் பல இடங்களில் இளையராஜா வளர்ந்து வருவதற்கு நானே காரணம், என் பாடலே காரணம் என்று வைரமுத்து கூறி வந்தார்.

இதைக் கேள்விப்பட்டு நான் அண்ணன் இளையராஜாவிடம் சொன்ன போதும், அவர் நம்பவில்லை. ஆதாரபூர்வமாக அதை அறிந்து கொண்ட பின்பு இளையராஜாவுக்கும் வைரமுத்துக்கும் விரிசல் ஏற்பட்டது. இளையராஜாவுக்கும் வைரமுத்துவுகும் விரிசல் ஏற்பட காரணமே, 'இளையராஜா என்னால் தான் வளர்கிறார்’ என்று வைரமுத்து பொது மேடைகளில் பேசியது தான்” இவ்வாறு கங்கை அமரன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x