Published : 05 Aug 2025 04:10 PM
Last Updated : 05 Aug 2025 04:10 PM
சென்னை: தமிழகத்தில், நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியுள்ள ’கிங்டம்’ திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, பட விநியோக நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.
நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ’கிங்டம்’ திரைப்படம், ஜூலை 31 ஆம் தேதி வெளியானது. தமிழகத்தில் 250 திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில், தமிழ் ஈழ பிரச்சினை குறித்து அவதூறு காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் இந்த படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை பெற்றுள்ள எஸ்.எஸ்.ஐ. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், முழுக்க முழுக்க கற்பனை கதையான இந்த படம், தமிழீழ பிரச்சினை குறித்த உணர்வுகளை புண்படுத்தும் வகையில் எடுக்கப்படவில்லை. முறையாக தணிக்கை சான்று பெற்று படம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சியினர், சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு, படம் திரையிடப்படுவதை தடுக்க முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.
பெருந்தொகை செலவிட்டு, படத்தை வெளியிட்டுள்ள நிலையில், உரிய பாதுகாப்பு வழங்காவிட்டால் வினியோக நிறுவனமான தங்களுக்கு மட்டுமல்லாமல் திரையரங்குகளுக்கு பெருத்த பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் தடையின்றி திரையிடப்படுவதை உறுதி செய்ய பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கு உத்தரவிடுவதுடன், படம் திரையிடுவதில் தலையிட நாம் தமிழர் கட்சியினருக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT