Last Updated : 01 Aug, 2025 11:23 PM

 

Published : 01 Aug 2025 11:23 PM
Last Updated : 01 Aug 2025 11:23 PM

“மிகப்பெரிய அவமானம்” - ‘கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தேசிய விருது வழங்கியது குறித்து பினராயி விஜயன் சாடல்

கொச்சி: ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை இயக்கிய சுதிப்தோ சென்னுக்கு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

71-வது தேசிய திரைப்பட விருதுகள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 01) அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த திரைப்படமாக ‘12த் ஃபெயில்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் திரைப்படமாக ‘பார்க்கிங்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்தப் படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த உறுதுணை நடிகர் விருதும், இப்படத்துக்கு சிறந்த திரைக்கதைக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை இயக்கிய சுதிப்தோ சென்னுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியிருப்பதாவது: “கேரளாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் தவறான தகவல்களை பரப்பி, வகுப்புவாத வெறுப்பை விதைக்கும் ஒரு திரைப்படத்தை கவுரவிப்பதன் மூலம், தேசிய விருதுகள் நடுவர் குழு, சங்பரிவாரின் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தில் வேரூன்றிய ஒரு கதைக்கு சட்டபூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக எப்போதும் நல்லிணக்கம் மற்றும் எதிர்ப்பின் கலங்கரை விளக்கமாக நிற்கும் நிலமான கேரளாவுக்கு, இந்த முடிவு மிகப்பெரிய அவமானத்தை தந்துள்ளது. மலையாளிகள் மட்டுமல்ல, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும், அரசியலமைப்பு மதிப்புகளைப் பாதுகாக்க தங்கள் குரலை எழுப்ப வேண்டும்” இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x