Published : 12 Jul 2025 08:14 AM
Last Updated : 12 Jul 2025 08:14 AM
திரைத்துறையினர் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை நடத்தும் நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனம் படத் தயாரிப்பில் இறங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் கார்த்திக் ஸ்ரீநிவாஸ், மகாவீர் அசோக் தயாரிக்கும் படத்தை ‘நாய் சேகர்’ திரைப்படத்தை இயக்கியவரும், ‘கோமாளி’, ‘கைதி’, ‘விஐபி 2’, ‘இமைக்கா நொடிகள்’, ‘கீ’ உள்ளிட்ட படங்களில் நடித்தவருமான கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்கி, நாயகனாக நடிக்கிறார்.
மலையாள நடிகையும் ‘கொட்டுக்காளி’ படத்தில் நடித்தவருமான அன்னா பென் நாயகியாக நடிக்கிறார். படம் பற்றிப் பேசிய கிஷோர் ராஜ்குமார், “காதலும் நகைச்சுவையும் நிரம்பிய கதை இது. ‘ஃபீல் குட்’ உணர்வைத் தரும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை உருவாக்க உந்து சக்தியாக இருந்தவர் கே.பாக்யராஜ் சார். அவர் இயக்கிய படங்கள் போல இன்றைய காலகட்டத்தில் படங்கள் வருவதில்லையே என்ற குறையை இந்தப் படம் போக்கும்.
ஜோடி பொருத்தம் பற்றி பேசும் இந்த கலகலப்பான படம் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இருக்கும். திறமையான நடிகையான அன்னா பென் உடன் இணைவதில் மிகவும் மகிழ்ச்சி” என்றார்.
படத்தின் ஒளிப்பதிவாளராகவும் இணை எழுத்தாளராகவும் பிரவீன் பாலு பங்காற்றுகிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT