Published : 02 Jul 2025 02:35 PM
Last Updated : 02 Jul 2025 02:35 PM
சென்னை: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் ஃபெப்சி இடையேயான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் ஃபெப்சிக்கு எதிராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய சங்கத்தை துவங்கி இருப்பதாக கூறி, ஃபெப்சி குற்றம்சாட்டி வந்தது.
இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில் ஃபெப்சி அமைப்பின் உறுப்பினர்கள் பணியாற்றுவதை நிறுத்த வேண்டும். ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன உறுப்பினர்களுக்கு ஏப்ரல் 2-ம் தேதி ஃபெப்சி கடிதம் அனுப்பி இருந்தது. இதனால் படப்பிடிப்பு மற்றும் படத் தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, இரு சங்கங்கள் இடையேயான பிரச்சினையை பேசி தீர்ப்பதற்கு ஏன் மத்தியஸ்தரை நியமிக்கக் கூடாது? என கேள்வி எழுப்பி, யாரை மத்தியஸ்தராக நியமிக்கலாம் என கலந்தாலோசித்து தெரிவிக்க இரு தரப்புக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது இருதரப்பிலும், ஓய்வு பெற்ற நீதிபதி எம். கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமிக்கலாம் என ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமித்து உத்தரவிட்டார்.
அப்போது, திரைப்படத் தயாரிப்புக்கு இடையூறு இல்லாமல் ஒத்துழைப்பு வழங்க ஃபெப்சி அமைப்புக்கு உத்தரவிட வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு ஃபெப்சி தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் மத்தியஸ்தர் நியமிக்கப்பட்டுள்ளதால், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என நீதிபதி மறுத்து விட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT