Published : 24 Jun 2025 08:30 AM
Last Updated : 24 Jun 2025 08:30 AM

ரஜினியால் சினிமாவானது ஒய்.ஜி.மகேந்திரனின் ‘சாருகேசி’!

ஒய்.ஜி.மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம், ‘சாருகேசி’. இதில் சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி மணிரத்னம், தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன், மதுவந்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அருண்.ஆர் தயாரித்துள்ள இந்தப் படத்தை, சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். பாடல்கள், வசனம் பா. விஜய். தேவா இசையமைத்துள்ளார். இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

விழாவில், ஒய்.ஜி.மகேந்திரன் பேசும்போது, “எனது 75 வயதில் இப்படி ஒரு கதாபாத்திரம் கிடைத்ததற்குக் கடவுளுக்கு நன்றி. இன்றைய இளம் இயக்குநர்களுக்கு மத்தியில் சுரேஷ் கிருஷ்ணா இந்தப் படத்தைச் சிறப்பாக எடுத்துக் கொடுத்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு கத்தி, ரத்தம் இன்றி வரும் தமிழ் படம் இது. படம் முடிந்து வெளியே வரும் போது மனதுக்கு நிறைவாக இருக்கும்.

ரஜினிகாந்த் நீண்ட நாட்களாக எனக்கு ஆலோசகராக இருந்து வருகிறார், அவருக்கு மிகப்பெரிய நன்றி. நானும் சுரேஷ் கிருஷ்ணாவும் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் பணம் சம்பாதித்தோம் என்பதை விட, இத்தனை மனிதர்களைச் சம்பாதித்துள்ளோம் என்பதுதான் பெருமை. படத்தின் வெற்றியுடன் மீண்டும் ஒருமுறை சந்திப்போம்” என்றார்.

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பேசும்போது, ‘‘ரஜினி சார் இந்த நாடகத்தைப் பார்த்துவிட்டு படமாக எடுங்கள் என்று சொல்லியிருக்கிறார். நானும் அதைச் சொன்னேன். தயாரிப்பாளர் அருண், ‘நீங்கள் இயக்கினால், நான் தயாரிக்கிறேன்’ என்றார். நாடகத்தைப் படமாக மாற்றுவது மிகவும் கடினம். சாருகேசி நாடகத்தைப் பார்த்ததும் 2 நாட்களில் திரைக்கதை எழுதி விட்டேன். இதில் பாடல் பாடிய சங்கர் மகாதேவனுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்” என்றார். படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x