Published : 15 Jun 2025 08:35 AM
Last Updated : 15 Jun 2025 08:35 AM

படை தலைவன்: திரை விமர்சனம்

பொள்ளாச்சி அருகிலுள்ள சேத்துமடை கிராமத்தைச் சேர்ந்தவரான வேலு (சண்முக பாண்டியன்), அப்பா (கஸ்தூரி ராஜா), சகோதரியுடன் வசித்து வருகிறார். கூடவே 25 வருடமாக வளர்ந்து வருகிறது மணியன் என்ற யானையும்.

அதை தங்கள் வீட்டில் ஒருவராகப் பார்க்கிறார்கள் வேலு குடும்பத்தினர். ஒரு கட்டத்தில் யானையை ஒரு கும்பல் கடத்திச் சென்று விட, அதைக் கண்டுபிடிக்க செல்கிறார்கள், வேலுவும் அவர் நண்பர்களும். அந்த யானை கடத்தப்பட்டது ஏன்? அதைக் கண்டுபிடிக்கச் செல்லும் வழியில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன, யானையை மீட்டார்களா, இல்லையா? என்பது கதை.

நாயகனுக்கும் யானைக்குமான பிணைப்பை கொண்டு நிறைய தமிழ்ப் படங்கள் வந்திருக்கின்றன. இதுவும் அப்படியான ஓர் படம்தான். இரண்டு வித கோணத்தில் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர், அன்பு. முதல் பாகம், குடும்ப உறுப்பினர்களில் ஒன்றாக வளரும் யானைக்கும் குடும்பத்துக்கும் இடையே உள்ள பிணைப்பைப் பேசுகிறது. குடும்பத்தில் எல்லோரும் யானைக்காக உருகுகிறார்கள். ஆனால், அது சுவாரஸியமாகப் படமாக்கப்படாதது குறை. குடும்பத்தில் யானை எப்படி, ஏன் வந்தது, யானைக்கும் நாயகனுக்குமான ஆத்மார்த்த உறவு பற்றியெல்லாம் பேசாமலேயே கதை நகர்வது பலவீனம். யானைக்குச் செயற்கையாக மதம் பிடிக்க வைப்பது அதிர்ச்சியூட்டுகிறது.

யானை உரிமையாளர்களே அதை வாடகைக்கு விட முடிவு செய்துவிட்ட பிறகு, உறவினர் மூலம் சிக்கல் ஏற்படுத்தும் காட்சிகள் ரசிக்கும்படியாக இல்லை. இரண்டாம் பாகக் கதை ஒடிஷாவில் உள்ள மலைக் காட்டுக்குச் சென்றுவிடுகிறது. அங்கு காட்டில் அராஜகம் செய்யும் வில்லன்களோடு மல்லுக்கட்டுவது என்று திரைக்கதையின் போக்கு மாறுகிறது. முதலில் ஒடிஷாவுக்கு யானை எப்படி சென்றது? நாயகனின் தலைக்கு அவ்வளவு பணம் விலை வைப்பது யார்? பிறகு அவர்கள் என்ன ஆனார்கள் போன்ற கேள்விகளுக்கு இயக்குநர் பதில் சொல்லாமலேயே நகர்ந்துவிட்டார். காணாமல் போகும் யானையைக் கண்டுபிடிப்பதிலும் சுவாரஸியம் இல்லை. ஆனால், ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் விஜயகாந்த் வரும்போது தியேட்டரில் கைதட்டல் அள்ளுகிறது.

படத்தின் நாயகன் சண்முக பாண்டியன், இயக்குநர் கொடுத்த வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். அவருடைய உயரமும் கட்டுமஸ்தான உடலும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு உதவுகிறது. ஆனால், உடல் மொழியிலும் முகபாவங்களிலும் கொஞ்சம் கவனம் தேவை. அவருடைய தந்தையாகவும் யானைக்காக உருகுபவராகவும் கஸ்தூரி ராஜா நேர்த்தியாக நடித்திருக்கிறார். யாமினி சந்தரை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம். கருடன் ராமு, முனீஸ்காந்த், யூகி சேது, ஏ.வெங்கடேஷ் உள்ளிட்ட துணைக் கதாபாத்திரங்களின் தேர்விலும் நடிப்பிலும் குறையில்லை.

இளையராஜாவின் பின்னணி இசை உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது. எஸ்.ஆர். சதிஷ்குமார் ஒளிப்பதிவில் பொள்ளாச்சியும் ஒடிஷா மலைக்காடும் அழகாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளன. முதல் பாகத்தில் படத்தொகுப்பாளர் எஸ்.பி. அகமது, கத்திரி போட்டிருக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x