Published : 04 Jun 2025 07:20 PM
Last Updated : 04 Jun 2025 07:20 PM
சென்னை: நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்தினால் சங்க கட்டிட கட்டுமான பணிகள் பாதிக்கப்படும். எனவே நிர்வாகிகளின் பதவிக் காலம் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது, என்று நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்க சட்ட திட்டத்தின்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த 2022-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தலைவராக நடிகர் நாசர், பொதுச் செயலாளராக நடிகர் விஷால், பொருளாளராக நடிகர் கார்த்தி, துணைத் தலைவர்களாக பூச்சி முருகன் மற்றும் நடிகர் கருணாஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது.
இந்நிலையில், கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், மேலும் 3 ஆண்டுகளுக்கு பதவிக் காலத்தை நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்தும், அந்த பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய கோரியும், தேர்தலை உயர் நீதிமன்ற நீதிபதியை ஆணையராக நியமித்து நடத்த கோரி நடிகர் நம்பிராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் நடிகர் சங்கம் பதிலளிக்க உத்தரவிட்டது.
இந்த வழக்கில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நடிகர் விஷால் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்ட கட்டுமான பணிகள் 25 கோடி ரூபாய் செலவில் தொடங்கபட்டு 60 சதவீத கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது. தங்களுடைய பதவிக்காலம் கடந்த மார்ச் மாதம் முடிவடைய இருந்த நிலையில் 2025-2028 புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வேலைகள் தொடங்கப்பட்டால் சங்க நிர்வாகத்தின் கட்டிட பணிகள் பாதிக்கப்படும்.
எனவே, பொதுக்குழு, செயற்குழுவில் தற்போதைய நிர்வாகிகளுடைய பதவி காலத்தை மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜனநாயக அடிப்படையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. பொதுக் குழுவுக்கு உச்சபட்ச அதிகாரம் உள்ளது. பதவிக்கால நீட்டிப்பில் எந்தவித விதிமீறலும் இல்லை. விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழு தீர்மானத்தில் 300 பேர் கையொப்பமிட்டுள்ளனர். அதற்கான ஆவணம் பதிவுத்துறை பதிவாளரிடம் தாக்கல் செய்யபட்டுள்ளது. இந்த வழக்கு உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்ய வேண்டும், என பதில்மனு கூறப்பட்டிருந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி இருதரப்பின் விரிவான வாதத்துக்காக வழக்கை ஜூன் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT