Published : 01 Jun 2025 10:49 AM
Last Updated : 01 Jun 2025 10:49 AM
போலீஸ் அதிகாரியின் கடமை உணர்வுக்கு இப்போதும் உதாரணமாகச் சொல்லப்படும் படம், ‘தங்கப்பதக்கம்’. போலீஸ் எஸ்.பி, சவுத்ரியாக சிவாஜியின் கம்பீர நடிப்பை மறந்துவிட முடியுமா என்ன?
இதன் கதையை ‘இரண்டில் ஒன்று’ என்ற பெயரில் நாடகமாக எழுதியவர், அப்போது நாடக ஆசிரியராகவும் பத்திரிகையாளராகவும் இருந்த மகேந்திரன். எஸ்.ஏ. கண்ணன் இயக்கியிருந்த இந்த நாடகத்தில் கடமை தவறாத போலீஸ் அதிகாரியான எஸ்.பி., சவுத்ரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் செந்தாமரை. பலமுறை நடத்தப்பட்ட இந்த நாடகத்தை ஒரு நாள் பார்த்த சிவாஜி கணேசன், செந்தாமரையையும் மகேந்திரனையும் அழைத்தார். நாடக உரிமையை வாங்கிக் கொள்வதாகக் கூறிய அவர், இனி நானே எஸ்.பி., சவுத்ரியாக நடிக்கிறேன் என்றார். பின்னர் கிளைமாக்ஸ் உள்பட சில இடங்களில் மாற்றங்களைச் செய்து, ‘இரண்டில் ஒன்று’வை ‘தங்கப்பதக்கம்’ ஆக்கினார் சிவாஜி.
நேர்மையான போலீஸ் அதிகாரி, தன் மகன் மீது காட்டும் கண்டிப்பு அவருக்கு எதிராக அவனைத் திருப்புகிறது. ஒரு கட்டத்தில் அந்த வெறுப்பு தந்தையை பழிவாங்கும் அளவுக்குச் செல்ல, பிறகு என்ன நடக்கிறது என்பது கதை. கொஞ்சம் உளவியலையும் பேசிய நாடகம் இது.
இந்த நாடகம் சிவாஜியின் கம்பீரமான நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்றது. நூறு முறை மேடையேற்றப்பட்டது. நூறாவது நாள் நாடகத்தின்போது மகேந்திரனை மேடையில் ஏற்றி மோதிரம் அணிவித்து மகிழ்ந்தார் சிவாஜி.
அந்த நாடகம் பின்னர் சினிமாவானது. பி.மாதவன் இயக்கினார். நாடகத்தில் சிவாஜியின் மனைவியாக சிவகாமியும் மகனாக ராஜகண்ணனும் நடித்திருந்தனர். சினிமாவுக்காக கே.ஆர்.விஜயா மனைவியாகவும் மகனாக ஸ்ரீகாந்தும் நடித்தனர். நாடகத்தில் இல்லாத அரசியல்வாதி கதாபாத்திரத்தை சோவுக்காக சேர்த்தார்கள். சோ அரசியல்வாதியாகவும் போலீஸ் கான்ஸ்டபிளாகவும் இரண்டு வேடங்களில் நடித்தார்.
பிரமிளா, வி.கே.ராமசாமி, மேஜர் சுந்தர்ராஜன், ஆர்.எஸ்.மனோகர், சுருளிராஜன், மனோரமா, கே.விஜயன், பூர்ணம் விஸ்வநாதன் என பலர் நடித்தனர். ஸ்ரீகாந்த் வில்லனாக நடித்தார். தமிழ் சினிமாவில் புதுவகையான வில்லன் என்று அவரை அப்போது புகழ்ந்தன பத்திரிகைகள். பி.என்.சுந்தரம் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார். கண்ணதாசன் பாடல்கள் எழுதினார்.
‘தத்திச் செல்லும் முத்துக்கண்ணன் சிரிப்பு’, ‘நல்லதொரு குடும்பம்’, ‘சுமை தாங்கி சாய்ந்தால்’, ‘சோதனை மேல் சோதனை’ என அனைத்துப் பாடல்களும் ஹிட்டாயின.
ஒரு போலீஸ் அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதையும் கடமைக்கும் பாசத்துக்கும் இடையிலான போராட்டத்தையும் மிரட்டலான நடிப்பால், சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார் சிவாஜி. அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் படத்தில் வரவேற்பைப் பெற்றது.
1974-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான ‘தங்கப்பதக்கம்’ பெரும் வெற்றி பெற்றது. 175 நாட்கள் ஓடிய இந்தப் படத்தின் வெற்றி விழாக்கள் பல்வேறு ஊர்களில் நடைபெற்றன. அப்போதைய தமிழக ஐ.ஜி-யாக இருந்த எஃப்.சி. அருள், தமிழகம் முழுவதும் போலீஸ் ஸ்டேஷன்களில் ‘தங்கப்பதக்கம்’ படத்தைத் திரையிட ஏற்பாடு செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT