Published : 01 Jun 2025 09:49 AM
Last Updated : 01 Jun 2025 09:49 AM
வ.கவுதமன் இயக்கி நடித்துள்ள படம், ‘படையாண்ட மாவீரா'. காடுவெட்டி குரு-வின் வாழ்க்கைக் கதையான இதில் சமுத்திரக்கனி, பூஜிதா, பாகுபலி பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், சாய் தீனா, ஆடுகளம் நரேன், மன்சூர் அலிகான், தமிழ் கவுதமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
நிர்மல் சரவணராஜ், எஸ்.கிருஷ்ண மூர்த்தி தயாரிப்பில் வி.கே. புரொடக்ஷன்ஸ் வழங்கும் இந்தப் படத்தின் பாடல்களுக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். சாம்.சி.எஸ். பின்னணி இசை அமைத்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, ‘‘தமிழில் இருந்துதான் கன்னட மொழி வந்தது என்று கமல்ஹாசன் சொன்னது வரலாறு. அதை அவர் பேசியிருக்கிறார். அதை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் விருப்பம். அவர் படத்தை ஓட விடமாட்டோம் என்கிறார்கள். நாங்கள், உங்களின் கேஜிஎப் போன்ற படங்களைச் சுதந்திரமாக ஓடவிட்டதற்கான பரிசு இது. நீங்கள் தடுத்தால் எங்களுக்குத் தடுக்க முடியாதா? முடியும். ஆனால் நாங்கள் செய்வதில்லை. ஏனென்றால் தமிழனின் பேரன்பும் பெருந்தன்மையும் மாண்பும் அது. உங்கள் பகையை படத்திலும் குடிக்கும் நீரிலுமா காட்டுவது?
கவுதமன், 'படையாண்ட மாவீரா'வை வீரமும் அறமும் சுமந்த படைப்பாக எடுத்துள் ளார். அவர் படைப்பாற்றலை நாம் ஏற்கெனவே கண்டுள்ளோம். ‘சந்தனக்காடு’, ‘மகிழ்ச்சி’ அவர் திறமைக்கான சான்றுகள். அவரின் அடுத்த படைப்பான ‘படையாண்ட மாவீரா’ மிகவும் அருமையாக வந்துள்ளது. இதைத் திரைப்படமாக மட்டும் சுருக்கிவிட முடியாது. மிகுந்த உழைப்பு, சிரமத்துக்குப் பிறகு இப்படம் உருவாகியுள்ளது.
முன்னோட்டத்தையும், பாடல்களையும் பார்த்தேன். படத்தைப் பார்க்கத் தூண்டுகின்றன” என்றார்.
தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன், இயக்குநர்கள் வி.சேகர், வசந்தபாலன், பேரரசு, நடிகர் இளவரசு மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT