Published : 31 May 2025 07:58 AM
Last Updated : 31 May 2025 07:58 AM

இலங்கையில் 350 நாட்கள் ஓடி சாதனை படைத்த எம்.ஜி.ஆரின் ‘என் தங்கை’!

அந்த காலகட்ட நாடக உலகில், டி.எஸ்.நடராஜனுக்குத் தனிப் பெயர் இருந்தது. அவருடைய ‘என் தங்கை’ நாடகம் மாபெரும் வெற்றி பெற்றதால், ‘என் தங்கை’ நடராஜன் என்றே அவரை அழைத்து வந்தனர். இந்த நாடகம் நடந்து வந்த கால கட்டத்தில்தான், பாவலர் பாலசுந்தரம் எழுதிய ‘பராசக்தி’ நாடகமும் புகழ் பெற்று வந்தது.

அப்போது பிரபலமாக இருந்த இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமியிடம் சில தயாரிப்பாளர்கள், அதைப் படமாக்கக் கேட்டுக்கொண்டனர். இரண்டு நாடகங்களையும் பார்த்தார், ஏ.எஸ்.ஏ.சாமி. இரண்டும் தங்கை பற்றிய கதை என்பதால் இரண்டையும் ஒன்றாக்கி படமாக்கலாம் என்றார். அதற்கு நடராஜன் ஒப்புக்கொள்ளவில்லை.

இதையடுத்து ‘பக்த மார்க்கண்டேயா’, ‘பக்த பிரகலாதா’ உள்பட தமிழ், தெலுங்கில் பல படங்களை இயக்கிய சித்தரப்பு நாராயண ராவ் என்ற சி.ஹெச்.நாராயணமூர்த்தி, ‘என் தங்கை’ கதையைத் திரைப்படமாக்கினார். அசோகா பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் அண்ணனாக நடிக்க, பிரபல பாடகர் திருச்சி லோகநாதனைத் தேர்வு செய்தனர். சில காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு, சிறந்த பாடகரான திருச்சி லோகநாதனுக்கு நடிப்பு சரியாக வரவில்லை என்று இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் புரிந்தது.

படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, வேறு ஹீரோவை தேடினர். அப்போது அவர்களுக்கு நம்பியார் மூலம் கிடைத்தவர், மந்திரிகுமாரி, மர்மயோகி, சர்வாதிகாரி என்று வரிசையாக புகழேணியில் ஏறிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்! இப்படத்தில் அண்ணன் கேரக்டரில் நடிக்க எம்.ஜி.ஆருக்கும் அதிக ஆர்வம் இருந்தது. இலங்கையில் இருந்து எம்.ஜி.ஆரின் குடும்பம் தமிழகம் வந்தபோது அவருடைய தங்கை, மருத்துவ வசதியின்றி இறந்ததாகக் கூறப்படுகிறது. அந்த தங்கை பாசத்தை மனதில் வைத்துதான் எம்.ஜி.ஆர். இதில் நடிக்க அதிக ஆர்வம் காட்டினார் என்றும் அதுவே அந்த படத்தின் வெற்றிக்கு வித்திட்டதாகவும் சொல்வார்கள். ஆனால், ‘என் தங்கை’ நாடகமாக நடத்தப்பட்டபோது, அதில் அண்ணனாக நடித்தவர் சிவாஜி கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கேரக்டரில்தான் எம்.ஜி.ஆர் நடித்தார்.

இந்தப் படத்தின் மூலம் ஈ.வி.சரோஜா அறிமுகமானார். அவர் பார்வையற்ற சகோதரியாக நடித்தார். மிகுந்த சோகக் கதையைக் கொண்ட படமான இது, ‘பாசமலர்’ படத்துக்கு முன்பே அண்ணன்- தங்கை பாசத்தைச் சொன்ன திரைப்படம். இதன் கிளைமாக்ஸில் எம்.ஜி.ஆரின் நடிப்பு, அனைவருக்கும் கண்ணீரை வரவழைத்துவிடும். சி.என்.பாண்டுரங்கன் இசை அமைத்தார். பாடல்களை, பாரதிதாசன், அ.மருதகாசி, சுரதா, சரவணபவாநந்தர், கி.ராஜகோபால், நரசிம்மன் ஆகியோர் எழுதினர்.

பி.வி.நரசிம்ம பாரதி, மாதுரி தேவி, சி.எஸ்.பாண்டியன், எம்.என்.ராஜம், பி.எஸ்.கோவிந்தன், வி.சுசீலா, கே.சாரங்கபாணி, எஸ்.ஆர்.ஜானகி, எம்.ஜி.சக்கரபாணி, எஸ்.என்.நாராயண சாமி, மாஸ்டர் கிருஷ்ணன், என்.ஆழ்வார், பொள்ளாச்சி கமலா, எம்.ஆர்.ராஜேஸ்வரி என பலர் நடித்தனர்.

1952-ம் ஆண்டு இதே நாளில் வெளியான இந்தப் படம், தமிழ்நாட்டில் வெற்றிபெற்றது. இலங்கையில் 350 நாட்கள் ஓடி சாதனை படைத்த படமாகவும் அமைந்தது. இதே படம் பின்னர் தெலுங்கு, இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x