Published : 26 May 2025 08:26 AM
Last Updated : 26 May 2025 08:26 AM
சினிமா தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில், தொழில்நுட்பம் அதிகம் வளராத நேரத்தில், சிறந்த லைட்டிங் மற்றும் ஒளிப்பதிவின் மூலம் சில ஒளிப்பதிவாளர்கள் கவனிக்கப்பட்டனர். அதில் இருவர், ஆங்கிலோ - இந்திய ஒளிப்பதிவாளரான தமிழ்நாட்டைச் சேர்ந்த மார்கஸ் பார்ட்லி (Marcus Bartley) மற்றும் ஆடி இரானி (Adi Irani).
இதில் மார்கஸ் பார்ட்லி, பாதாள பைரவி (1951), மிஸ்ஸியம்மா (1955), மாயா பஜார் (1957), செம்மீன் (1965) உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மலையாளம், இந்திப் படங்களிலும் பணியாற்றி இருக்கிறார். ஆடி இரானி, சேதுமாதவன் இயக்கிய ஞான சுந்தரி மற்றும் இந்தி, தெலுங்கு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்த தமிழ்ப் படம், ‘லாவண்யா’.
ஜி.ஆர்.லட்சுமணன் தனது ஈஸ்டர்ன் ஆர்ட் புரொடக்ஷன்ஸ் சார்பாகத் தயாரித்து எழுதி, இயக்கிய இந்தப் படத்தில், டி.இ.வரதன் கதாநாயகனாக நடித்தார். இவர் அந்த காலத்து அறிவியல் பட்டதாரி. கோவையைச் சேர்ந்த தயாரிப்பாளர் எஸ்.எம். ராமுலு நாயுடு இவரை சினிமாவில் அறிமுகப் படுத்தினார். சில படங்களில் ஹீரோவாக நடித்த அவர், பின்னர் சினிமாவை விட்டுவிட்டு தொழிலதிபர் ஆகிவிட்டார்.
இதில், சூர்யபிரபா, வனஜா, குமாரி கமலா, ‘புளிமூட்டை’ ராமசாமி, டி.எஸ்.ஜெயா, சி.ஆர்.ராஜகுமாரி என பலர் நடித்தனர். இது நாட்டுப்புறக் கதை ஒன்றைத் தழுவி உருவாக்கப்பட்ட மிரட்டலான ஃபேன்டஸி படம். ஏழைப் பெண்களான குமாரி கமலாவும் வனஜாவும் தெருக்களில் நடனமாடி பிழைப்பு நடத்துகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் விளையாட, இரண்டு தேவதைகள் பூமிக்கு வருகிறார்கள். வந்த பின் அதில் ஒருவரான கமலா காணாமல் போகிறார். வனஜாவை, இளைஞனாக (வரதன்) மாற்றுகிறார்கள். அந்த இளைஞன், லாவண்யா (சூர்யபிரபா) என்ற இளவரசியைக் காதலிக்கிறான். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள்.
இதற்கிடையில், இளைஞன் முன் தோன்றும் ஒருவர், மாய மோதிரம் ஒன்றைப் பரிசளிக்கிறார். ‘இந்த மோதிரம் உங்கள் கனவு, ஆசை அனைத்தையும் நிறைவேற்றும். ஆனால், ஒரு தடங்கல் இருக்கிறது. திருமணம் செய்தால், அனைத்தும் மாயமாகிவிடும்’ என்கிறார். அதன்படி நடக்கிறான். இளவரசியை சந்திப்பதைத் தவிர்க்கிறான். அவன் விரும்பிய எல்லாம் கிடைக்கிறது. ஒரு கட்டத்தில் இளவரசியின் முன் சரணடைகிறான். இதனால், மாய மோதிரம் மறைந்து விடுகிறது. அவனிடம் இருந்த அனைத்தும் மறைகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது கதை. எஸ்.வி.வெங்கட்ராமன் இசை அமைத்த இந்தப் படத்தின் பாடல்களை, பாபநாசம் சிவன் எழுதினார். டி.கே.பட்டம்மாள் பாடிய ‘தங்க ஒரு நிழலில்லையே...’ பாடல் ஹிட்டானது.
வாஹினி ஸ்டூடியோவில் படமான இதில் இடம்பெற்ற நடனங்களை கே.என்.தண்டாயுதபாணி பிள்ளை, வழுவூர் பி. ராமையா பிள்ளை, ஹிரா லால் அமைத்தனர்.
1951-ம் ஆண்டு இதே நாளில் வெளியான இந்தப் படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் நடனங்களும் ஒளிப்பதிவும் அதிகமாகப் பாராட்டப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT