Published : 16 May 2025 02:12 PM
Last Updated : 16 May 2025 02:12 PM
யூடியூபில் திரைப்படங்களை விமர்சனம் செய்து அதன் மூலம் ஆதரவாளர்களையும், அதே அளவு ஹேட்டர்களையும் ஈட்டி வைத்திருப்பவர் கிஸா 47 (சந்தானம்). திரை விமர்சகர்களை குறிவைத்து தன்னுடைய பாழடைந்த தியேட்டருக்கு வரவழைத்து கொல்லும் பேய் ஹிட்ச்காக் இருதயராஜ் (செல்வராகவன்) ஹீரோ கிஸாவை தனது திரையரங்குக்கு வரவழைக்கிறார். ஆனால் அவருக்கு முன்பாகவே ஹீரோவின் குடும்பத்தினர் (நிழல்கள் ரவி, கஸ்தூரி, யாஷிகா ஆனந்த்) அங்கு சென்று மாட்டிக் கொள்கின்றனர்.
ஹீரோவும் அவரது நண்பரும் (மொட்டை ராஜேந்திரன்) திரைக்குள் இழுக்கப்பட்டு அதில் ஓடும் திரைப்படத்துக்குள் சென்று பார்க்கும்போதுதான் தெரிகிறது, அதில் இருக்கும் நடிகர்களாக ஹீரோவின் குடும்பத்தினர் இருப்பது. திரைக்குள் ஹீரோவின் காதலி (கீதிகா திவாரி) பேயாக மாறி இருக்கிறார். அவர் ஏன் பேயாக மாறினார்? திரைக்குள் இருந்து தனது குடும்பத்தை ஹீரோ எப்படி வெளியே கொண்டு வந்தார் என்பதே ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் மீதிக் கதை.
இந்த ‘டிடி’ பட வரிசையில் இது நான்காவது படம். இதுவரை வெளியான மூன்று படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. குறிப்பாக கடைசியாக வெளியான ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்டது. இப்படியான சூழலில் ‘கோவிந்தா’ பாடல் சர்ச்சை, படக்குழுவின் தொடர் புரோமோஷன் உள்ளிட்ட வெளிச்சத்துடன் வெளியாகியிருக்கிறது இப்படம்.
ஒரு திகில் காமெடி ஜானருக்கான கச்சிதமான கதையை தேர்வு செய்திருக்கிறார் இயக்குநர். சினிமா விமர்சகர்களை பழிவாங்கும் பேய், திரைக்குள் சென்று மாட்டிக் கொள்ளும் பிரதான கதாபாத்திரங்கள் என சுவாரஸ்யமான ஒன்லைனரை எடுத்துக் கொண்டு தமிழில் ஒரு ஸ்பூஃப் வகை திரைப்படத்தை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார்.
சந்தானம் பேசும் டயலாக் டெலிவரி பல இடங்களில் கைகொடுக்கிறது. ‘ப்ரோ’ என்று சொல்லி அவர் பேசும் மாடுலேஷன் புன்னகையை வரவழைக்கிறது. மொட்டை ராஜேந்திரன் - சந்தானம் கூட்டணியில் சில ‘குபீர்’ தருணங்களும் உள்ளன. உதாரணமாக சப்டைட்டில் தொடர்பாக வரும் காட்சி, கவுதம் மேனனின் ‘உயிரின் உயிரே’ மீளுருவாக்கம் உள்ளிட்ட காட்சிகளில் தியேட்டர் அதிர்கிறது.
இது போன்ற சில குறிப்பிடத்தக்க தருணங்கள் இருப்பினும் ஒட்டுமொத்தமாக திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார் இயக்குநர். கதாபாத்திரங்கள் திரைக்குள் செல்லும்வரை ஓரளவு விறுவிறுப்பாக சென்ற படம், அதன்பின் தாறுமாறாக அலைபாய்கிறது. எந்த கதாபாத்திரமும் அழுத்தமாக வடிவமைக்கப்படவில்லை. இதற்கு முன்பு வந்த ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படமும் இதே பாணி ஹாரர் காமெடி திரைப்படம்தான் என்றாலும் அதில் இடம்பெற்ற புத்திசாலித்தனமான திரைக்கதையும், அழுத்தமான கதாபாத்திரங்களும் இதில் முற்றிலுமாக இல்லை.
குறிப்பாக இரண்டாம் பாதியின் இழுவை சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு இருக்கிறது. படம் இதோ முடிந்து விட்டது என்று நாம் நினைக்கும் இடங்களில் எல்லாம், முற்றுப்புள்ளிக்கு பதில் கமா போட்டு மீண்டும் மீண்டும் இழுத்து வைத்திருக்கிறார்கள். குறிப்பாக நிழல்கள் ரவி பாத்ரூம் காட்சி, மர்ம டைரியை யார் எடுப்பது என்பது தொடர்பான காட்சிகள் சிரிக்க வைப்பதற்கு பதிலாக பொறுமையை கடுமையாக சோதிக்கின்றன.
படத்தின் க்ளைமாக்ஸில் வரும் ‘மெல்ல சாவ்’ பாடல் நல்ல ஐடியா. இது போல அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நல்ல தருணங்கள் மட்டுமே படத்தில் உள்ளன. ஆஃப்ரோவின் பின்னணி இசை சுமார் ரகம். தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவில் கலர்ஃபுல்லான காட்சிகள் ஈர்க்கின்றன. சிஜியில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். கேனிபல்களாக வருபவர்களின் ஒப்பனை ‘ராங் டர்ன்’ ஹாலிவுட் படத்தை நினைவூட்டுகிறது. சந்தானம், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி, கஸ்தூரி, கவுதம் மேனன் உள்ளிட்டோர் ஒரு காமெடி படத்துக்கு எது தேவையோ அதை கொடுத்திருக்கின்றனர்.
மொத்தத்தில் ’டிடி’ படவரிசையில் மிகவும் ‘வீக்’ ஆன திரைக்கதையை கொண்ட படமாக இதனை சொல்லலாம். அந்த அளவுக்கு ஓரிரண்டு காட்சிகளை தவிர பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி எதுவும் இல்லாமல் மிகவும் தட்டையாக நகர்கிறது படம். படத்தின் தொடக்கத்தில் செல்வராகவன் ஒரு வசனத்தை சொல்கிறார். ‘முடிந்தால் இந்த படத்திலிருந்து எப்படியாவது தப்பித்து ஓடிவிடு’ என்று. இந்த படத்துக்கும் அதே வசனத்தை பொருத்திப் பார்க்கலாம். அதே போல ஒரு பேட்டியில் தோல்வி அடையப் போகும் படங்களை முதல் நாள் ஷூட்டிங்கிலேயே கணித்துவிடுவேன் என்று சந்தானம் சொல்லியிருந்தார். இதனையும் அப்படி கணித்து முன்கூட்டியே சொல்லி இருந்தால் மற்றவர்களும் தப்பித்திருக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT