Published : 16 May 2025 08:11 AM
Last Updated : 16 May 2025 08:11 AM
சென்னை: “எல்லா தோல்விப் படங்களும் எனக்கு முதல் நாள் ஷூட்டிங்கின்போதே தெரிந்துவிடும். ஆனால், நம்மை மீறி செய்யும்போது நம்மால் எதுவும் செய்ய முடியாது” என்று நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் சந்தானம் கூறியது: “ஒரு படத்தின் கதையை படித்துவிட்டு முதல் நாள் ஷூட்டிங் போகும்போதே சொல்லிவிடுவேன், இந்த படம் தோல்வி அடையும் என்று. அதே போலத்தான் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தின் கதையை படித்துவிட்டு ராஜேஷிடம் சொன்னேன். காரணம், கதையில் பிரதான விஷயமே அடிவாங்கிவிட்டது.
கரீனா சோப்ரா என்ற ஒரு கதாபாத்திரத்தை காட்டி, அதை வைத்து ஹீரோவை நாயகி சந்தேகப்படுகிறார், வில்லன் கோட்டா சீனிவாசராவ் ஆசைப்படுகிறார் எனும்போது அந்த கதாபாத்திரத்துக்கான ஒப்பனை ‘அவ்வை சண்முகி’ அளவுக்கு இருக்க வேண்டும் என்று சொன்னேன்.
இந்த கதாபாத்திரத்துக்கு மெனக்கெட்டிருக்கிறார்கள் என்று ஆடியன்ஸும் நினைப்பார்கள். பெண் வேடமிடும் ஒரு ஆண் மீது இன்னொரு ஆண் ஆசைப்படுகிறார் என்பது அவ்வை சண்முகி படத்தின் கதை. அந்த படம் பெரிய ஹிட். அதற்கு காரணம் மேக்கப். அதற்காக அவர்கள் அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள். ஆனால் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தில் அதே போன்ற காட்சியை வைக்கும்போது ஆடியன்ஸ் நம்பவில்லை.
ஏனென்றால், இதில் சாதாரண மேக்கப் இடம்பெற்றிருந்தது. அதை நான் ராஜேஷிடமும் சொன்னேன், படத் தயாரிப்பு நிறுவனத்திடமும் சொன்னேன். அவர்கள் அதை கேட்கவில்லை.
எல்லா தோல்விப் படங்களும் எனக்கு முதல் நாள் ஷூட்டிங்கின்போதே தெரிந்துவிடும். ஆனால், நம்மை மீறி செய்யும்போது நம்மால் எதுவும் செய்ய முடியாது. சில விஷயம் மிகவும் சூப்பராக வரும் என்று நினைத்து செய்வோம், ஆனால் அது ஓரளவு சுமாராக படத்தில் வரும். ஆனால் தோல்வி அடையாது” என்று சந்தானம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT