Published : 14 May 2025 05:45 AM
Last Updated : 14 May 2025 05:45 AM
சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’. பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இதில், கீதிகா திவாரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, ராஜேந்திரன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில், தி ஷோ பீப்பிள் சார்பில் நடிகர் ஆர்யா வழங்கும் இந்தப் படம் வரும் 16-ம் தேதி வெளியாகிறது.
இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் சந்தானம் கூறியதாவது: ஆர்யாவும் நானும் எப்போதும் தொடர்பில் இருப்போம். ஒரு நாள் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, “நீ காமெடியெனா இருக்கும் போது ஜாலியா இருப்ப, இப்பல்லாம் அந்த ஃபன் இல்லையே, ஏன்?” என்று கேட்டார். அதற்கு நான், நாயகனுக்கான சவால்கள் குறித்தும், இன்னும் சில சிக்கல்கள் பற்றியும் அவரிடம் சொன்னேன்.
அப்போது அவர், “டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் படத்தில் நீ முழுவதுமாக இறங்கி வேலை செய். உன் பிரச்சினைகளை நான் பார்த்துக்கிறேன்” என்றார். அப்படித்தான் இந்தப் படத்தை ஆரம்பித்து முடித்துள்ளோம். ஒரு நல்ல கதை, திரைக்கதை, காமெடி, ஆக்டிங் என எல்லாம் இதில் இருக்கிறது. இயக்குநர் பிரேம் ஆனந்தை தமிழ்த் திரை உலகின் கிறிஸ்டோபர் நோலன் என்று சொல்வேன். அவர் பண்ணும் கதை பல லேயர்களை கொண்டிருக்கும். இந்த படத்தையும் அப்படித்தான் அற்புதமாக உருவாக்கியுள்ளார். இவ்வாறு சந்தானம் கூறினார்.
அவரிடம், பாடலில் பெருமாளைக் கிண்டல் செய்ததாக எழுந்த சர்ச்சை குறித்து கேட்ட போது, “நான் பெருமாள் பக்தர். கடவுள் பாடல் வைக்க வேண்டும் என்ற ஆசையில்தான் அந்தப் பாடலை வைத்தேன். அதில் கிண்டல் செய்யவில்லை. எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது.
பெருமாளை எனக்குப் பிடிக்கும். சிம்பு நண்பர் என்பதால் அவர் படத்தில் காமெடியனாக நடிக்கிறேன். அதே போல் நண்பர் உதயநிதி அழைத்தால், எனக்கு சில விஷயங்கள் செட்டானால் அவருக்காக, வரும் தேர்தலில் பிரச்சாரம் செய்வேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT